இரலை மலைக்கு வழி கூறுதல் 3704. | அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்தபின்றை, வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி, வெய்ய துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத் துளக்கு இல் குன்றம் நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள். |
அனகனும் இளைய கோவும் - குற்றம் இலாதவனாகிய இராமபிரானும் இளவலாகிய இலக்குவனும்; அன்று அவண் உறைந்த பின்றை - அன்றைக்கு அந்த மதங்காசிரமத்திலே தங்கியிருந்தபின்; வினை அறு நோன்பினாளும் - இருவினைப் பயனும் நீங்குதற்கு ஏற்ற தவநிலை பெற்றவளாகிய சவரி; மெய்ம்மையின் நோக்கி - (இராமலக்குவரை) மெய்யான அன்போடு பார்த்து; வெய்ய துனை பரித்தேரோன் - வெப்பம் கொண்டதும் விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றதுமாகிய தேரினைச் செலுத்துவோனாகிய கதிரவனின்; மைந்தன் - மகனாகிய சுக்கிரீவன்; இருந்த - வாழ்ந்து வந்த; அத் துளக்கு இல் குன்றம் - அழிதல் இல்லாத அந்த ருசியமுகம் என்னும் மலையை (அடைதற்குரிய); நினைவு அரிது ஆயற்கு ஒத்த - நினைப்பதற்கு அரியதும் ஆராய்ந்து தெளிந்தால் மட்டுமே தெரியக் கூடியதும் ஆகிய; நெறி எலாம் - வழி முழுவதையும்; நினைந்து சொன்னாள் - எண்ணிப் பார்த்துச் சொன்னாள். அனகன் : குற்றம் இல்லாதவன் நோன்பு : தவம் தவத்தின் பயன் இருவினைப் பிணி நீங்குதல்; சவரி அந்த நிலை அடைந்தவள் என்பதை 'வினை அறு நோன்பினாள்' என்ற தொடர் குறித்தது. இனி இரலை மலைக்குப் போகும் வழியைத் தெரிவதே இராமலக்குவர்களின் அவதாரப் பயணத்துக்கு உண்மைப் பயனாகும்; ஆதலின் 'தெமெய்ம்மையின் நோக்கி' என்றார். இதுவரை நோக்கியது தன் நிலை குறித்தது; இது அவர்கள் அவதாரப் பயணம் குறித்தது. அவ்வழி நினைவிற்கும் கொடுமையானது; மேலும், ஆராய்ந்து தெளிந்தே செல்லுதற்கு உரியது; எனவே, நினைவு அரியது என்றும் ஆயற்கு ஒத்தது என்றும் கூறினார். அறு நோன்பு, துணை பரி வினைத் தொகைகள். துளக்கு - முதனிலைத் தொழிற்பெயர். 6 |