3705. வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி
     வெளியிற்று ஆகக்
காட்டுறும் அறிஞர் என்ன,
     அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ -
     கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின்
     சுவையாய் நின்றான்.

    கேள்வியால் - வேதங்களால்; செவிகள் முற்றும் தோட்டவர்-
செவிகள் முழுதும் துளைக்கப்பட்ட பெரியோர்கள்; உணர்வின்
உண்ணும் -
தங்கள் ஞானத் தெளிவினால் நுகரும்; அமுதத்தின்
சுவையாய் நின்றான் -
அமுதத்தின் சுவையாக இருக்கின்ற
இராமபிரான்; வீட்டினுக்கு அமைவது ஆன - மோட்சத்தை
அடைவதற்கு உரிய பொருத்தமான; மெய்ந்நெறி வெளியிற்று ஆக -
உண்மையான நெறி வெளிப்படத் தெரியும்படியாக; காட்டுறும்
அறிஞர் என்ன -
புலப்படுத்துகின்ற ஞானாசிரியர்கள் போல;
அன்னவள் கழறிற்று எல்லாம் - அச் சவரி கூறியவற்றையெல்லாம்;
கேட்டனன் - (கூர்ந்து) கேட்டுக் கொண்டான்; என்ப மன்னோ -
என்று சான்றோர் சொல்லுவர்.

     மீட்டிங்கு வாரா வீட்டு நெறியினைத் தெளிவுறக் காட்டும் ஞான
குருவின் சொற்களை நன்மாணாக்கன் ஆர்வமும் அக்கறையும்
கொண்டு கேட்பான்; அது போலச் சவரி கூறியவற்றை இராமபிரான்
கேட்டான் என்பதாம். முன் பாடலில் 'வினையறு நோன்பினாளும்
மெய்ம்மையின் நோக்கி...... சொன்னாள்' என அமைந்த தொடரினை
இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். வேடுவர் குலத்துச் சவரி
சொன்னவற்றைக் கேட்டவன் யார்? வேத ஞானிகள் நுகரும்
அமுதத்தின் சுவையாய் உள்ள பரம் பொருள் அப்படிக் கேட்டான்
என்கிறார் கம்பர். ஆசிரிய நிலையில் பாகவதரையும் மாணவ
நிலையில் பகவானையும் அமைத்திருப்பது தலை தடுமாற்றம் அன்று
என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே என்ப, மன், ஓ
என மூன்று அசைகளால் கம்பர் பிணித்து நிறுத்துகிறார். மெய்ந்நெறி
சொல்லுவார் உலகியல் நிலையாதாயினும் குரு ஆகிறார்; கேட்டுத்
தெளிபவர் உயர்வற உயர்நலம் உடையோராயினும் மாணாக்கர்
ஆகிறார். குரு - சிஷ்ய பாவத்தில் இஃது ஒரு தனி நிலை.

     கேள்வி என்பதற்குக் கேட்டறிதற்குரிய நூல்கள் என்று பொருள்
உரைப்பதுண்டு. பரமனையே ஞானச் சுவையாக நுகரச் செய்யத்தக்கது
என்ற கருத்துப் பற்றிக் 'கேள்வி'க்கு வேதம் என இங்கே பொருள்
உரைக்கப்பட்டது. புறநானூறு (புறநா. 361) முதலான பழைய
நூல்களிலும் இப்பொருள் ஆளப்பட்டது உணர்க. 'சுருதி'
(கேட்கப்படுவது) என வேதம் சுட்டப்படும்.

     நின்றான் என்ற இறந்த கால வினைமுற்றின் இடைநிலை காலம்
குறித்ததன்று;                                               7