பம்பைப் பொய்கையின் தோற்றம் கலிவிருத்தம் 3709. | தேன் படி மலரது;செங் கண், வெங்கைம்மா - தான் படிகின்றது; தெளிவு சான்றது; மீன்படி மேகமும் படிந்து, வீங்கு நீர், வான் படிந்து, உலகிடைக் கிடந்த மாண்பது; |
தேன்படி மலரது - (அப்பொய்கை) தேன் பொருந்திய மலர்களை உடையது; செங்கண் வெங்கைம்மா - சிவந்த கண்களையும் வலிமை பொருந்திய கையினையும் உடைய யானைகள்; தான் படிகின்றது - தன்னிடத்தே மூழ்கித் திளைக்கப் பெற்றது; தெளிவு சான்றது - தெளிவு மிக்கது; மீன்படி - விண்மீன்கள் பொருந்திய; மேகமும் படிந்து - வானத்து மேகங்களும் தன்னிடம் தங்கப் பெற்றதுமான; வீங்கு நீர் வானம் - மிகுதியான நீரையுடைய ஆகாயமே; உலகிடைப் படிந்து கிடந்த - இவ்வுலகில் வந்து கிடக்கின்றது என்று சொல்லக்கூடிய; மாண்பது - சிறப்பினை உடையது. ஆரணிய காண்டத்தின் இறுதியில் 'பாம்பையாம் பொய்கை புக்கார்' என்று கூறியுள்ளதால், இதுமுதல் பதினைந்து பாடல்களுக்கு 'அப்பொய்கை' எனத் தோன்றா எழுவாய் வருவித்து முடிக்க. நீர்நிறைந்த பொய்கைக்கு வீங்குநீர் வானமும், பொய்கையில் மலர்ந்துள்ள மலர்களுக்கு வானில் உள்ள மீன்களும், அப்பொய்கையில் மூழ்கித் திளைக்கும் யானைகளுக்கு மேகங்களும் உவமை. 'மீன் படி மேகமும் படிந்து' என்னுந்தொடர் சிலேடைப் பொருளில் வானிற்கும் பொய்கைக்கும் பொருந்துவதையும் காணலாம். விண்மீன்களையும் மேகத்தையும் கொண்டது வானம் எனில் மீன்களையும், கடலெனக் கருதி நீர்முகக்க வந்து மேகம்படியும் நீரையும் பெற்றது பொய்கையாகும். யானை மதம் கொண்ட நிலையில் அதன் கண்கள் சிவப்புறுதலும், கை வெதும்புதலும் இயல்பாதலின் 'செங்கண் வெங்கைம்மா என்றார். யானைகள் மூழ்கித் திளைத்த நிலையிலும் கலங்காத பொய்கையின் நிலையைத் 'தெளிவு சான்றது' என உரைத்தார்; இதனால் பொய்கையின் ஆழமுடைமைகூறப்பட்டது. 1 |