3744. | நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும், தீத்த காமத் தெறு கதிர்த் தீயினால், காய்த்து இரும்பை, கருமகக் கம்மியன், தோய்த்த தண் புனல் ஒத்தது, அத் தோயமே. |
நெடியவன் - இராமன்; நீத்தம் நீரில்- பொய்கையின் வெள்ள நீரில்; மூழ்கலும் - முழுகின அளவில்; தீத்த - (அவன் திருமேனியை) வெதுப்பிய; காமத் தெறுகதிர்த்தீயினால் - காமமாகிய அழிக்கின்ற சுடர்விட்டு எரியும் நெருப்பினால்; அத்தோயம் - அப்பொய்கை நீர்; கருமகக்கம்மியன் - இரும்பு வேலை செய்பவனாகிய கருமான்; காய்த்து இரும்பை- இரும்பைக் காய்ச்சி; தோய்த்த - தோய்த்ததான; தண்புனல் ஒத்தது- குளிர்ந்த நீரை ஒத்தது. சீதையைப் பிரிந்து வருந்தும் இராமபிரான் நீராடிய மாத்திரத்தில் அவன் மேனியின் வெப்பத்தால் அத்தண்ணீர் கொல்லன் உலையில் காய்ச்சிய இரும்பைத் தோய்த்த நீர்போலக் கொதித்தது என்பதாம்; உவமையணி. காமமும் கனலும் தாம் சேர்ந்த இடத்தைச் சுட்டெரிக்கும் தன்மையன ஆதலால் 'தீத்த காமத்தெறுகதிர்த்தீ' என்றார்; உருவக அணி. உலகத்து நீர் நெருப்பை அவிக்க, இக்காமத்தீ அந்நீரையும் கொதிக்கச் செய்யும் இயல்புடையதென வேற்றுமைப்பட வருதலின் வேற்றுமை அணியாகும். கருமகக்கம்மியன் - கருமக(கருமா)னாகிய கம்மியன்;இரு பெயரொட்டு. நீத்தம் - வெள்ளம்; நீந்தப்படுவது என்னும் பொருளது. 36 |