3760.'தன்கன்று கண்ட அன்ன
     தன்மைய, தறுகண் பேழ் வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா,
     வேங்கை, என்று இனையவேயும்,
பின்சென்று, காதல் கூரப்
     பேழ்கணித்து இரங்குகின்ற;
என்கன்றுகின்றது, எண்ணிப்
     பற்பல இவரை? அம்மா!

     தறுகண் - கொடிய கண்ணையும்; பேழ்வாய் - பெரிய வாயினையும்;
மின்கன்றும் எயிற்று -
மின்னலும் ஒளிகுன்றி வருந்தும் படியான பற்களையும்
உடைய; கோள்மா - சிங்கம்; வேங்கை - புலி; என்று இனைய ஏயும்-
என்ற இவைபோன்ற கொடிய விலங்குகளும் (இராமலக்குவரைக் கண்டு); தன்
கன்று -
தத்தம் கன்றுகளை; கண்ட அன்ன தன்மையை - கண்டாற்போன்ற
தன்மையனவாய்; பின்சென்று காதல்கூர - இவர்கள் பின்னால் சென்று காதல்
மேலிட; பேழ் கணித்து இரங்குகின்ற - மருண்டு விழித்து உள்ளம்
உருகுகின்றன; இவரைப் பற்பல எண்ணி - (இங்ஙனம் இருக்க) இவர்களைப்
பகைவர்களாகப் பலவாறு எண்ணி; கன்றுகின்றது ஏன்? - வருந்துவது ஏன்?

     கொடிய விலங்குகளும் தம் கொடுமை நீங்கி, இராமலக்குவர் மாட்டு
அன்புகாட்டி உருகுமாயின், இவர்களைப் பகைவர்களாக எண்ணி
அஞ்சுவதற்குக் காரணம் இல்லை என்பது பெறப்படுகிறது. கொடிய
விலங்குகளும் தம் கன்றுகளுக்கு அன்பு காட்டல் இயல்பு ஆதலின்
இராமன்மாட்டு அன்புகாட்டும் விலங்குகளுக்கு அவற்றை உவமை கூறினார்.
இதனால் இராமலக்குவரின் உயர்வு புலனாகிறது. 'தன் கன்று கண்ட அன்ன
தன்மைய' என்றது ஒருமை பன்மை மயக்கம். அம்மா - வியப்பிடைச்சொல். 10