3784.'நல்லனநிமித்தம் பெற்றேம்;
     நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே, துன்பம் ஆனது;
     இன்பமும் எய்திற்று; இன்னும்,
வில்லினாய்! இவனைப் போலாம் கவிக்
     குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான்;
     அவன் நிலை சொல்லற்பாற்றோ?'

     நல்லன நிமித்தம் பெற்றேம் - முன்னர் நல்லனவாகிய சகுனத்தைப்
பெற்றோம்; நம்பியைப் பெற்றேம் - அதனால் அனுமனாகிய இந்நம்பியை
இங்கு அடையப் பெற்றோம்; நம்பால் - (இனி) நம்மிடத்து; துன்பம் ஆனது
இல்லையே -
துன்பம் என்பது இல்லை; இன்பமும் எய்திற்று - இன்பமும்
வந்தடைந்தது; இன்னும் - மேலும்; வில்லினாய் - வில்லைஉடையவனே!
இவனைப் போலாம் வீரன் -
இவனைப்போன்ற வீரன்; கவிக்குலக் குரிசில்
சொல்லினால் -
குரங்குக் கூட்டத்திற்குத் தலைவனாகிய சுக்கிரீவன்
கட்டளையால்; ஏவல் செய்வான் - குற்றவேல் செய்வான் (என்றால்); அவன்
நிலை -
அச் சுக்கிரீவனது நிலை; சொல்லற் பாற்றோ - சொல்லும்
தரத்ததோ? (அன்று).

     நல்லவர் துணை பெற்றமையால் துன்பம் நீங்கலும்.  இன்பம் பெறலும்
உறுதி என்பது உணர்த்தப்பட்டது. வீரனாகிய அனுமன் ஏவல் செய்வான்
எனில் இவனை ஏவலனாகக் கொண்ட சுக்கிரீவன் நிலை அனுமனினும்
மேம்பட்டது என்பது பெறப்படும்.  கண்ட அனுமனைக் கொண்டு காணாத
சுக்கிரீவன் பெருமையை இராமன் ஊகித்தான்.  அதனால் சீதையை மீட்டல்
தப்பாது எனக் கருதி 'நம்பால் இல்லையே துன்பமானது இன்பமும் எய்திற்று'
என்றான்.                                                    34