3787. | மேலவன்,திருமகற்கு உரை செய்தான், 'விரை செய் தார் வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக் காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்' எனா, ஆலம் உண்டவனின் நின்று, அரு நடம் புரிகுவான். |
ஆலம் உண்டவனின் நின்று - (அனுமன்) ஆலகால நஞ்சு உண்ட சிவபெருமானைப்போல நின்று; அருநடம் புரிகுவான் - அரிய நடனம் ஆடுபவனாய்; விரை செய் தார்- வாசனை மிக்க மாலையை உடைய; வாலி என்ற அளவு இலா - வாலி என்று சொல்லப்படும் அளவில்லாத; வலியினான்- வலிமை உடையவனின்; உயிர்தெற- உயிரை அழிக்க; காலன் வந்தனன் - யமன் வந்துவிட்டான்; இடர்க்கடல் கடந்தனம் - (ஆதலால்) நாம் துன்பக்கடலைக் கடந்து விட்டோம்; எனா - என்று; மேலவன் திருமகற்கு- வானத்தில் செல்லும் சூரியனின் மகனான சுக்கிரீவனுக்கு; உரை செய்தான் - உரைத்தான். சூரியன் விண்ணில் இயங்கும் சிறப்புப்பற்றி 'மேலவன்' எனப்பெற்றான். வாலியின் ஏவலின் வருபவராக எண்ணியதற்கு மாறாக, அவனைக் கொல்லும் யமன் போன்று இராமலக்குவர் வந்துள்ள செய்தியை மகிழ்ச்சியால்ஆடிக் கொண்டே அனுமன் சொன்னான் என்பதாம். அவன் சிவபெருமான்அமிசமாய் அவதரித்தவன் ஆதலின் 'ஆலம் உண்டவனின் நின்று' என்றார். முன்னரும் அனுமனைத் 'தனி அருளும் தாழ்சடைக் கடவுள்' (3753) எனக் கூறியது காண்க. வாலி இதுவரை போரில் வென்று வெற்றிமாலைக்கு உரியவன் ஆதலின் 'விரை செய் தார் வாலி' என்றான். சுக்கிரீவன் முதலானாரோடு போர்செய்யத் தும்பை சூடி வருதலின் 'விரை செய் தார் வாலி' எனவும் கொள்ளலாம். தன்னோடு போர்செய்வாரின் வலிமையில் பாதியைத் தன் வலிமையோடு பெற்றுவிடுவான் ஆதலின் 'அளவிலா வலியினான்' எனப்பட்டான். வாலி பிறந்தபோது, இந்திரன் வந்து பொன்மாலையை அணிவித்து, யார் எதிர்த்தாலும் எதிர்த்தார். வலிமையில் பாதி வாலிக்கு வருவதாக என வரம் அளித்தான் என்பது கதை. 'வாலி என்ற அளவு இல் ஆற்றல் வன்மையான்' (10124) என மேல் வருதலும் காண்க. காலன் - உவமை ஆகுபெயராய் இராமனை உணர்த்திற்று. இடர்க்கடல்- உருவகம். 2 |