3792.'நல்உறுப்பு அமையும் நம்பியரில்
     முன்னவன் - நயந்து,
எல் உறுப்பு அரிய பேர்
     எழு சுடர்க் கடவுள்தன்
பல் இறுத்தவன் வலிக்கு
     அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் - மிதிலை
     புக்க அனைய நாள்.

     நல் உறுப்பு அமையும் - நல்ல உறுப்பிலக்கணம் அமைந்த; நம்பி
யரில் முன்னவன் -
அவ்ஆண் மக்களுள் முன் பிறந்தவனான இராமன்;
மிதிலை புக்க அனைய நாள் -
மிதிலை நகரத்துள் புகுந்த அந்த நாளில்;
எல் உறுப்பு -
ஒளி வீசும் கதிர்களை உறுப்பாக உடைய; அரிய பேரி
எழுசுடர்க் கடவுள்தன் -
அரிய பெரிய சூரிய பகவானின்; பல்
இறுத்தவன்-
பற்களை உதிர்த்தவனாகிய சிவபிரானின்; வலிக்கு அமை -
வலிமைக்குஏற்ப அமைந்த; தியம்பகம் எனும்வில் - 'திரியம்பகம்' என்று
சொல்லப்பெறும் வில்லை; நயந்து - (வளைக்க) விரும்பி; இறுத்து
அருளினான் -
ஒடித்து அருளினான்.

     அரச குமாரர்களுக்கு ஏற்ற உறுப்பிலக்கணம் பெற்றவராதலின் 'நல்
உறுப்பு அமையும் நம்பியர்' என்றார்.  ஆடவரில் சிறந்தோர் 'நம்பியர்'
எனப்படுவர்.  எரிசுடர்க்கடவுள் பல்லிறுத்தது - வீரபத்திரனாகச் சிவபிரான்
தக்கன் யாகத்தில் மற்ற தேவர்களோடு வந்திருந்த சூரியனின் பற்களைத்
தகர்த்ததாகக் கூறப்படும் வரலாறு. 'சூரியனார் தொண்டை வாயினில் பற்களை,
வாரி நெரித்தவா உந்தீபற' (திருவாசகம் - திருவுந்தி - 15) என்றது காண்க.

     தியம்பகம் - திரியம்பகம் என்பதன் திரிபு; சிவதனுசுவின் பெயர். மூன்று
கண்களை உடையதால் திரியம்பகம் எனப்பட்டது. சுடர்மிகு கதிரவனின்
பற்களைத் தகர்த்த சிவபிரானின் வில்லை முறித்த இராமனுக்கு வாலியை
வெல்வது எளிய செயலே எனச் சுக்கிரீவனுக்கு இங்குக் குறிப்பாக
உணர்த்தப்பட்டது.                                              7