வாலியின் சிறப்பு 3822. | 'நாலுவேதம் ஆம் நவை இல் ஆர்கலி வேலி அன்னவன், மலையின்மேல் உளான், சூலிதன் அருள் துறையின் முற்றினான், வாலி என்று உளான், வரம்பு இல் ஆற்றலான். |
நாலு வேதம் ஆம் - நான்கு வேதங்களாகிய; நவை இல் ஆர்கலி - குற்றமற்ற கடலுக்கு; வேலி அன்னவன் - வேலியைப் போலப் பாதுகாவலாய் உள்ளவனும்; மலையின் மேல் உளான் - கைலாய மலையின்மேல் வீற்றிருப்பவனுமாகிய; சூலி தன் - சூலப்படையுடைய சிவபிரானின்; அருள் துறையின் - கருணையின் வழியில்; முற்றினான் - முதிர்ந்தவனாகிய; வரம்பு இல் ஆற்றலான் - எல்லையற்ற வலிமை உடையவனாய்; வாலி என்று உளான் - வாலி என்று ஒருவன் உள்ளான். பரப்பாலும் பேரொலியாலும் வேதங்கள் ஆர்கலி எனப்பட்டன. சிவபிரான் நான்கு வேதங்களாகவும், வேதப் பொருளாகவும் விளங்கி, வேதங்களைக் காப்பதால் நான்கு வேதங்களுக்கும் வேலி அன்னவன் என்றார். 'நால் வேதன் காண்' (தேவாரம்-6-8-3), 'மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை' (தேவாரம்-6-3-4) என்ற அடிகளைக் காண்க. சூலி - சூலாயுதத்தை உடையவன். அருள்துறையின் முற்றினான் - சிவபிரானின் அருளைப் பெற்றவன் என்பது பொருள். வாலி சிவபக்தன் என்பதை, 'அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்' (3625) ''பஞ்சின் மெல்லடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும், அஞ்சலித்து அறியாச் செங்கை ஆணையாய்'' (4086) என்ற அனுமன், அங்கதன் கூற்றுகளாலும், தாரை புலம்பலிலும் (4101) காணலாம். திருவடகுரங்காடு துறை, திருக்குரங்கணில் முட்டம் என்னும் தலங்களில் வாலி சிவபிரானை வழிபட்டதாக அத் தல புராணங்கள்உணர்த்துகின்றன. 37 |