3843.'சேமம் அவ் வழிச் செய்து, செங் கதிர்க்
கோமகன்தனைக் கொண்டுவந்து, யாம்
மேவு குன்றின்மேல் வைகும் வேலைவாய்,
ஆவி உண்டனன் அவனை, அன்னவன்.

     அவ்வழிச் சேமம் செய்து - அந்தப் பிலத்து வழியை (குன்றுகளால்
அடைத்து) பாதுகாவலைச் செய்து; செங்கதிர்க் கோமகன்தனை - சிவந்த
கதிர்களை உடைய சூரியன் மைந்தனாம் சுக்கிரீவனை; கொண்டு வந்து -
அழைத்துக்கொண்டு வந்து; யாம் - நாங்கள்; மேவு குன்றின் மேல் -
எங்கள் இருப்பிடமாகிய கிட்கிந்தை மலைமேல்; வைகும் வேலைவாய்-
தங்கியிருந்த காலத்தில்; அவனை - அந்த மாயாவியை; அன்னவன் -
அவ்வாலி; ஆவி உண்டனன் - கொன்றான்.

     வழியை அடைத்த பின்னர்ச் சுக்கிரீவன் அரசனாக்கிக் கிட்கிந்தையில்
தங்கியிருந்தபோது வாலி மாயாவியைக் கொன்றிட்டான் என்பதாம். சேமம் -
பாதுகாவல்; உயிரை உண்டனன்- உண்ணப் பெறாததை உண்டதாகக் கூறுவது
இலக்கணை.                                                    58