சுக்கிரீவன், இராமனை அணுகித் தன் கருத்தைக் கூறுதல்

3864. 'நன்று நன்று' எனா, நல்
     நெடுங் குன்றமும் நாணும்
தன் துணைத் தனி
     மாருதி தோளிணை தழுவி,
சென்று, செம்மலைக் குறுகி,
     'யான் செப்புவது உளதால்,
ஒன்று உனக்கு' என, இராமனும்,
     'உரைத்தி அஃது' என்றான்

     நன்று நன்று எனா - (அனுமன் கூறியதைக் கேட்ட சுக்கீரிவன்) 'நீ
சொன்னது நல்லது நல்லது' என்று மகிழ்ந்து; தன் தனித் துணை மாருதி -
தனது ஒப்பற்ற துணையாக விளங்கும் அனுமனின்; நல் நெடுங்குன்றமும்
நாணும் -
நல்ல பெரிய மலைகளும் நாணும்படியான; தோளினை தழுவி -
தோள்கள் இரண்டையும் தழுவிக் கொண்டு; செம்மலைச் சென்று குறுகி -
இராமனைச் சென்றடைந்து; யான் - - ; உனக்குச் செப்புவது - உனக்குச்
சொல்வது; ஒன்று உளது என - ஒரு செய்தி உள்ளது'' என்று சொல்ல;
இராமனும் - -
; அஃது உரைத்தி - ''அதனைச் சொல்வாய்''; என்றான் -
என்று சொன்னான்.

     அனுமன் கூறிய உபாயம் தனக்கும் ஏற்புடைத்தாக இருந்தமையால்
அவனது அறிவின் திறம்பாராட்டும் வகையில் 'நன்று, நன்று' என்று
கூறியதோடு அமையாது அவன் தோள்களைத் தழுவியும் தன் மகிழ்ச்சியைச்
சுக்கிரீவன் புலப்படுத்தினான்.

     அமைச்சர் பலருள் சுக்கிரீவனுக்கேற்ற ஒப்பற்ற துணையாய் இருப்பவன்
ஆதலின் அனுமனைத் ''தன் துணைத் தனிமாருதி' என்றார்.  அனுமன்
தோளினை 'எம் மலைக் குலமும் தாழ இசை சுமந்தெழுந்த தோளான்'' (3766)
என்றது காண்க.  நன்று நன்று - அடுக்கு வியப்பைக் குறிப்பது.  குன்றமும் -
உயர்வு சிறப்பும்மை.                                           79