இராமன் நாண் எறிந்து, அம்பு செலுத்துதல்

3876.ஆய மா மரம் அனைத்தையும்
     நோக்கி நின்று, அமலன்,
தூய வார் கணை துரப்பது
     ஒர் ஆதரம் தோன்ற,
சேய வானமும், திசைகளும்,
     செவிடு உற, தேவர்க்கு
ஏய்வு இலாதது ஓர் பயம்
     வர, சிலையின் நாண் எறிந்தான்.

    அமலன்- குற்றமற்றவனாகிய இராமன்; ஆய மாமரம் அனைத்தையும்-
அத்தன்மையனவான பெரிய மராமரங்கள் யாவற்றையும்; நோக்கி நின்று -
பார்த்து நின்று; தூய வார் கணை - தூய்மையான நீண்ட தன் அம்பை;
துரப்பது -
செலுத்துதற்கு ஏற்ற; ஓர் ஆதாரம் தோன்ற- ஒரு விருப்பம்
உண்டாக; சேய வானமும் திசைகளும் - நெடுந்தொலைவில் உள்ள
வானத்திலும் எல்லாத் திசைகளிலும் உள்ள உயிர்கள்; செவிடு உற - செவிடு
படவும்; தேவர்க்கு - தேவர்களுக்கு; ஏய்வு இலாதது ஓர் - (இதுகாறும்)
ஏற்படாததொரு; பயம் வர - அச்சம் உண்டாகுமாறும்; சிலையின் - வில்லில்
பூட்டிய; நாண் எறிந்தான் - நாணைத் தெறித்து ஓசையை எழுப்பினான்.

     இங்கு நாணின் ஒலிச் சிறப்புக் கூறப் பெற்றது.  சுக்கிரீவனுக்குத் தன்
வலிமையைக் காட்ட, ஏழு மரங்களையும் ஒரே அம்பால் ஒரு சேரத் துளைக்க
விரும்பி வானமும் திசைகளும் செவிடுபட, தேவர்கள் நடுங்க இராமபிரான்
நாணொலி எழுப்பினான் என்பதாம்.  தீயவர்களை அழித்தலும், குறித்த
இலக்குத் தப்பாமையும் கணைக்குத் தூய்மையாகும்.  தேவர்கள் முன்
கேட்டிராத நாணொலி யாதலின் அச்சம் எய்துவர் என்பதால் 'ஏய்வு
இலாததோர் பயம் வர' என்றார்.  தூய, சேய - குறிப்புப் பெயரெச்சங்கள்,
வானம், திசை - இடவாகு பெயர்.                                  12