3895. | 'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில், கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியொடும் பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து, எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான். |
அற்றது ஆகிய- அத்தன்மைத் தான; செருப் புரிவுறும் அளவினில்- போரினைச் செய்கின்ற பொழுதில்; கொற்ற வாலியும் - வெற்றியை உடைய வாலியும்; குலவு தோள் வலியொடும் - திரண்ட தன் தோள்களின் வலிமையோடு; அவன் - அவ்வரக்கனது; ஆசையின் நெடும் பணை மருப்பு இணை - திசைகளை அளாவி நீண்ட பருத்த இரண்டு கொம்புகளையும்; பற்றி- பிடித்து; பறித்து - பிடுங்கி எடுத்து; எற்றினான் - (அவற்றைக் கொண்டேஅவனை) அடித்தான்; அவனும் - அவ்வரக்கனும்; வான் இடியின் - வானில்உண்டாகும் இடியைப் போல; நின்று உரறினான் - முழங்கி நின்றான். இருவரும் வெற்றி தோல்வியின்றிப் பொருது வருகையில் வாலி வலிமை மிக்கவனாய், அவ்வரக்கனது கொம்புகளைப் பிடுங்கி அடிக்க, அவன் வலி தாளாது முழக்கமிட்டான். கொம்புகளை வேரொடு பறித்ததால் ஏற்பட்ட துன்பமும் அடிபட்டதால் நேர்ந்த துன்பமும் சேர அரக்கன் கலங்கிக் கதறினான். 10 |