3898.'புயல் கடந்து, இரவிதன் புகல்
     கடந்து, அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து,
     எனையவும் தவிர, மேல்
வயிர வன் கரதலத்து அவன்
     வலித்து எறிய, அன்று
உயிரும் விண் படர, இவ்
     உடலும் இப் பரிசுஅரோ!

     அவன் - அந்த வாலி; புயல் கடந்து - மேக மண்டலத்தைத் தாண்டி;
இரவிதன் புகல் கடந்து
- சூரியன் இருக்கும் இடத்தையும் தாண்டி; அயல்
உளோர் இயலும் மண்டிலம் -
மற்றைய தேவர்கள் பொருந்தி வாழ்கின்ற
மண்டலங்களை; இகந்து - கடந்து; எனையவும் தவிர - மற்றும் எல்லா
மேலிடங்களையும் கடக்கும்படி; வயிரவன் கரதலத்து - உறுதியான வலிய
கயினால்; மேல் வலிந்து எறிய -  (அவ்வரக்கனை) மேலே வலிமையோடு
வீச; அன்று - அப்பொழுது; உயிரும் விண் படர - அவன் உயிர்
மேலுலகத்திற்குச் செல்ல; இவ்வுடலும் - இந்த உடலும்; இப்பரிசு -
இவ்விதமாயிற்று.  (கீழே விழுந்து இங்கே கிடந்தது).

     ''வாலி துந்துபி உடலை மேலே வீசி எறிய, அவன் உயிர் பிரிய, உடல்
கீழே விழுந்தது என்றான்.  வான மண்டலங்கள் பலவற்றைக் கடந்து
வீசப்பட்ட உடல் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.                  13