3913. | 'திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள் வெருவரச் செய்துள வெய்யவன் புயம் இருபதும், ஈர் ஐந்து தலையும் நிற்க; உன் ஒரு கணைக்கு ஆற்றுமோ, உலகம் ஏழுமோ? |
திருமகள் அனைய - இலக்குமியை ஒத்த; அத்தெய்வக் கற்பினாள் - தெய்வத்தன்மை பொருந்திய கற்புடைய சீதை; வெருவர செய்து உள - அஞ்சுமாறு அவளுக்குத் தீங்கு செய்துள்ள; வெய்யவன் - கொடியவனான இராவணனுடைய; புயம் இருபதும் - இருபது தோள்களும்; ஈர் ஐந்து தலையும் - பத்துத் தலைகளும்; நிற்க - கிடக்கட்டும்; உன் ஒரு கணைக்கு - உனது ஓர் அம்பிற்கு; உலகம் ஏழும் ஆற்றுமோ - ஏழு உலகங்களும் சேர்ந்தாலும் ஏற்றுத் தாங்கும் வலிமையுடையன ஆகுமோ? (ஆகாது என்றபடி). முன் பாடலில் தன் ஆற்றலைக் கூறிய சுக்கிரீவன், தன் எளிய நிலையுணர்ந்து இராமனின் ஆற்றலை எடுத்துக் கூறுகிறான். சீதை அஞ்சுமாறு தீங்கு செய்த இராவணனின் இருபது தோள்களும், பத்துத்தலைகளும் இராமனது ஒருகணை முன் நிற்கவல்லன அல்ல எனக் கூறினான். தெய்வக் கற்பினான் - சீதை. ''கற்பெனும் பெயரது ஒன்றும் களி நடம் புரியக் கண்டேன்'', 'வான் உயர் கற்பினாள்' என்று (6035, 6038). பின்னரும் அனுமன் குறித்தமை காண்க. 'கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது, பொற்புடைத் தெய்வம் யாங்கண்டிலம்' (சிலப் - 12 - 15) என்ற அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன. 'தெய்வக் கற்பினாள்' என்றதால் சீதைக்கு எந்தத் தீங்கும் வராது' என்றும் சுக்கிரீவன் ஆறுதல் கூறினன்எனலாம். 13 |