3972. நின்றான், எதிர் யாவரும்
      நெஞ்சு நடுங்கி அஞ்ச,
தன் தோள் வலியால் தகை
      மால் வரை சாலும் வாலி,
குன்றூடு வந்து உற்றனன் -
     கோள் அவுணன் குறித்த
வன் தூணிடைத் தோன்றிய
      மா நரசிங்கம் என்ன.

     தன் தோள் வலியால் - தனது தோள்களின் வலிமையால்; தகைமால்
வரை சாலும்
- சிறப்பு மிக்க பெரிய மலையை ஒத்து விளங்கும்; வாலி -
வாலியானவன்; கோள் அவுணன் குறித்த- கொடிய அசுரனான இரணியன்
சுட்டிக்காட்டிய; வன் தூணிடைத் தோன்றிய - வலிமை மிக்க தூணிடத்தே
வெளிப்பட்டுத் தோன்றிய; மாநரசிங்கம் என்ன - பெருமைமிக்க நரசிங்க
மூர்த்தி போல; எதிர் யாவரும் - தன்னைக் காண்கின்ற எல்லோரும்; நெஞ்சு
நடுங்கி அஞ்ச
- மனம் நடுங்கி அச்சம் கொள்ள; குன்றூடுவந்து -
அம்மலையின் இடையே; உற்றனன் நின்றான் - வந்து சேர்ந்து நின்றான்.

     வாலியின் தோள்களுக்கு மால்வரை உவமை. போருக்குக் கூவியழைத்த
சுக்கிரீவன் எதிரே யாவரும் அஞ்சும் வகையில் தோன்றிய வாலிக்கு
இரணியன் சுட்டிக்காட்டிய தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிங்கம் உவமை. 38