3991.வாலினால் உரம் வரிந்தனர்,
      நெரிந்து உக வலிப்பர்;
காலினால் நெடுங் கால்
     பிணித்து உடற்றுவர்; கழல்வர்;
வேலினால் அற எறிந்தென,
      விறல் வலி உகிரால்,
தோலினால், உடன் நெடு வரை
      முழை எனத் தொளைப்பர்.

     வாலினால் உரம் வரிந்தனர் - ஒருவரையொருவர் தம் வாலினால்
மார்பினை இறுகப் பிணித்தவராய்; நெரிந்து உக வலிப்பர்- (எலும்புகள்)
நொறுங்கிப் பொடியாகும்படி இழுப்பர; காலினால் நெடுங்கால் பிணித்து -
தம் கால்களால் மற்றவர் நீண்ட கால்களை மாட்டி; உடற்றுவர் - இழுத்து
வருத்துவர்; கழல்வர் - பின் அப்பிடிப்பினின்று கழன்று வெளிப்படுவர்;
வேலினால் அற எறிந்தென -
வேற்படையினால் உடலைத் தைக்குமாறு வீசி
எறிந்தது போல; விறல் வலி உகிரால் - மிக்க வலிமை உடைய நகங்களால்;
தோலினால் உடல் -
தோலால் மூடப்பட்ட உடம்பினை; நெடுவரை முழை
என -
பெரிய மலையிலுள்ள குகை என்னும்படி; தொளைப்பர் - அழமாகத்
துளைப்பார்கள்.

     எறிந்தென - எறிந்தது + என; இது தொகுத்தல் விகாரம் உகிருக்கு வேல்
உவமை.                                                       57