3994. அன்ன தன்மையர், ஆற்றலின்
      அமர் புரி பொழுதின்,
வல் நெடுந் தடந் திரள்
      புயத்து அடு திறல் வாலி,
சொன்ன தம்பியை, தும்பியை
      அரி தொலைத்தென்ன,
தொல் நகங்களின், கரங்களின்,
      குலைந்து, உக மலைந்தான்.

     அன்ன தன்மையர் - அத்தகைய தன்மையையுடையவர்களான வாலி
சுக்கிரீவர்; ஆற்றலின் அமர்புரி பொழுதில் - வலிமையோடு போர் செய்து
கொண்டிருக்கையில்; வல்நெடுந் தடந்திரள் புயத்து - வலிய, நீண்ட, பெரிய
திரண்ட தோள்களையும்; அடு திறல் வாலி - பகைவரை வெல்லும்
வலிமையினையும் உடைய வாலி; சொன்ன தம்பியை - மேலே குறிப்பிட்ட
தம்பியான சுக்கிரீவனை; தும்பியை அரி தொலைத்தென்ன - யானையைச்
சிங்கம் அழிப்பது போன்று; கொல் நகங்களின் - கொல்லவல்ல
நகங்களாலும்; கரங்களின் - கைகளாலும்; குலைந்து உக மலைந்தான் -
வலிமை தளர்ந்து விழும்படி செய்தான்.

     தும்பி - யானை - வாலிக்குச் சிங்கமும் சுக்கிரீவனுக்கு யானையும்
உவமைகள்.  இதனால் வாலியின் ஆற்றல் மிகுதி கூறப்பெற்றது.  அரி என்பது
சங்கரிக்கும் அதாவது அழிக்கும் வலிமையுடையது என்னும் பொருளில்
சிங்கத்தைக் குறித்தது.  தொலைத்தென்ன - இது தொகுத்தல் விகாரம்.
நகங்களின், கரங்களின் என்புழி இன் ஏதுப் பொருளல்வந்தது.         60