அம்பில் இராம நாமம் காணல்

4012. பறித்த வாளியைப் பரு வலித்
      தடக் கையால் பற்றி,
'இறுப்பென்' என்று கொண்டு
      எழுந்தனன், மேருவை இறுப்போன்;
'முறப்பென் என்னினும், முறிவது அன்று
      ஆம்' என மொழியா,
பொறித்த நாமத்தை அறிகுவான்
      நோக்கினன், புகழோன்.

     மேருவை இறுப்போன் - மேரு மலையை முறிக்க வல்லவனும்;
புகழோன் -
புகழ் மிக்கவனும் ஆகிய வாலி; பறித்த வாளியை - (தன்
மார்பினின்று) பிடுங்கிய அம்பை; பரு வலித் தடக்கையால் பற்றி- தனது
பருத்த வலிமை வாய்ந்த பெரிய கைகளால் பிடித்து; இறுப்பென் -
'ஒடிப்பேன்'; என்று கொண்டு - என்று கருதி; எழுந்தனன் - எழுந்து;
முறிப்பென் என்னினும் -
'இதனையான் முறிப்பேன் என்று முயன்றாலும்;
முறிவது அன்றுஆம் -
(இது) முறியக்கூடிய எளியமையுடையது அன்றாம்';
என மொழியா -
என்று சொல்லி; பொறித்த நாமத்தை - அந்த அம்பில்
அடையாளமாக எழுதப்பட்டுள்ள பெயரை; அறிகுவான் நோக்கினன் -
அறியும் பொருட்டுக் கூர்ந்து பார்த்தான்.

     'மேருவை இறுப்போன்' என்றது வாலியின் வலிமையைக் காட்டியது.
புகழோன் - வீரத்தால் புகழ் வாய்ந்தவன்.  இராம நாமத்தை நோக்கும் பேறு
பெற்றவன்.  இராமனால் உயிர் இழக்கும் பேறு பெற்றவன் என்ற
காரணங்களால் 'புகழோன்' எனக் குறிக்கப் பெற்றான் எனினும் பொருந்தும்.
அறிகுவான் - வானீற்று வினையெச்சம்.                             78

அறுசீர் ஆசிரிய விருத்தம்