4036. | 'பற்றி, ஆன்ற படைத் தலை வீரரும், முற்று உணர்ந்த முதியரும், முன்பரும், ''எற்றும் நும் அரசு எய்துவையாம்'' என, கொற்ற நன் முடி கொண்டது, இக் கோது இலான். |
ஆன்ற படைத் தலை வீரரும் - (அது கேட்டு) ஆற்றல் நிறைந்த படைத்தலைவர்களாகிய வீரர்களும்; முற்று உணர்ந்த முதியரும் - (அரசியல் நெறிகளை) முழுவதும் உணர்ந்த அமைச்சர் போன்ற அனுபவம் மிக்கவர்களும்; முன்பரும் - (மற்றுமுள்ள) பெரியோர்களும்; எற்றும் - ''(நிகழ்ந்த செயல்) எத்தன்மைத்து ஆயினும்; நும் அரசு எய் துவையாம் - உங்கட்குரிய அரசாட்சியை நீ அடைவாயாக''; என - என்று கூறி வற்புறுத்த; இக்கோது இலான் - (அதனால்) குற்றமற்ற இந்தச் சுக்கிரீவன்; கொற்ற நன்முடி கொண்டது - வெற்றிக்கு அறிகுறியான மணிமுடியைச் சூட்டிக் கொள்ள நேர்ந்தது. 'நும்மரசை நீயே பெறுக' எனப் படைத்தலைவர் முதலியோர் வற்புறுத்தலே சுக்கிரீவன் அரசை ஏற்கவேண்டி வந்ததால் அவன்மீது குற்றமில்லை என இராமன் உணர்த்தினான். எற்றம் - வாலி, மாயாவி ஆகியோரின் செய்தி எவ்வாறாயினும் என்பது பொருள். நும் அரசு - வானரக் குலத்திற்குரிய அரசாட்சி. 'அரிகள் ஆணையால் கொடுத்தது உண்டு; இவன் கொண்டனன் கொலாம்?' (3841) என முன்னர்க் கூறியதும் காண்க. கொண்டது - தொழிற்பெயர் வினைமுற்றின் தன்மையடைந்தது. 'கோது இலான்' என இராமன் சுக்கிரீவனைக் குறித்தல் காண்க. 102 |