4044.'ஆதலானும், அவன் எனக்கு ஆர் உயிர்க்
காதலான் எனலானும், நிற் கட்டனென்;
ஏதிலாரும், எளியர் என்றால், அவர்
தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்துஅரோ.

     ஆதலானும் - (நீ இவ்வாறெல்லாம் செய்தாய்) ஆதலாலும்; அவன்
எனக்கு -
அந்தச் சுக்கிரீவன் எனக்கு; ஆருயிர்க் காதலான் எனலானும் -
அரிய உயிர் போன்ற நண்பன் ஆனதாலும்; நின் கட்டனென் - உன்
உயிரைப் பறித்தேன்.  ஏதிலாரும் - அயலாராயினும்;
எளியர் என்றால் - (தீயோரால் துன்புறுத்தப்படும்) எளிய நிலையினர்
என்றால்; அவர் தீது தீர்ப்பது - அவர்களது துன்பத்தைப் போக்குவது; என்
சிந்தைக் கருத்து -
என்னுடைய உள்ளக் கருத்தாகும்.

     ஆதலான் என்றது முன் கூறியவற்றைக் குறித்தது. வாலி பெரும்பிழை
செய்தமையாலும், சுக்கிரீவன் தன் நண்பன் ஆனதாலும், எளியோரைக்
காப்பதைத் தான் கொள்கையாகக் கொண்டதாலும் சுக்கிரீவனைக் காக்க
வாலியைக் கொல்ல வேண்டியதாயிற்று என்று இராமன் கூறினான்.  நிற்
கட்டனென் - களை பறிப்பது போலப் பறித்ததைக் குறிக்கும்.  வாலி அறம்
வளராமல் தடுக்கும்  களையாக இருந்தமை புலப்படுத்தப் பெற்றது.
நிற்கட்டனென் - இரண்டாம் வேற்றுமைத் தொகை.

     'பிலம்புக்காய்' என்பது முதல், 'ஆதலானும்' என்னும் இப்பாடல்
வரையுள்ள பதினொரு பாடல்களும், இராமன் தான் வாலியைக் கொன்ற செயல்
அறத்தொடு பொருந்தியதே என்பதை வாலிக்கு உணர்த்தும் வகையில்
அமைந்தனவாகும்.                                              110