வாலியின் எதிர்வாதம்

4045. 'பிழைத்த தன்மை இது' எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரைசெய, தக்கிலாது
இழைத்த வாலி, 'இயல்பு அல, இத் துணை;
விழைத் திறம், தொழில்' என்ன விளம்புவான்:

     பிழைத்த தன்மை இது என - '(நீ) தவறு செய்த விதம் இது' என்று;
பேர்எழில் தழைத்த வீரன் -
மிக்க அழகு நிரம்பிய வீரனாகிய இராமன்;
உரை செய -
வாலிக்கு எடுத்துரைக்க; தக்கிலாது இழைத்த வாலி - தகாத
செயலைச் செய்த வாலி; இத்துணை - (நீ கூறிய) இவ்வளவு நீதிகளும்;
இயல்பு அல -
வானங்களான எமக்குப் பொருந்துவன அல்ல; விழைத்திறம்
தொழில் -
விரும்பியவாறு தொழில் செய்வதே (எமக்கு உரியது); என்ன -
என்று கூறி; விளம்புவான் - மேலும் சொல்பவனானான்.

     பேரெழில் தழைத்தல் - செழித்து விளங்கும் பேரழகு. பேரெழில்
தழைத்த வீரன் என்றது இராமனை.  'மானிடற்க எண்ணுங்கால், இவ்
இலக்கணம் எய்திட ஒண்ணுமோ (1088) என்றமை காண்க.  தக்கிலாது -
வினையாலணையும் பெயர்.  இயல்பல இத்துணை விழைத்திறம் என்பதற்கு -
தகுதியில்லாதவனவாக நீ கூறிய இவ்வளவும் நாங்கள் விரும்பிச் செய்யத்தக்க
தொழில்களாகும் எனவும் பொருள் கொள்வர்.  வாலி தன்மீது கூறப்பட்ட
குற்றங்களை மறுக்க முயல்வதை இங்குக்காணலாம்.                  111