4048. 'பெற்றி மற்று இது;
      பெற்றது ஒர் பெற்றியின்
குற்றம் உற்றிலன்; நீ,
      அது கோடியால் -
வெற்றி உற்றது ஒர்
      வெற்றியினாய்!' எனச்
சொற்ற சொல் துறைக்கு
      உற்றது, சொல்லுவான்:

     வெற்றி உற்றது ஓர் வெற்றியினாய் - என்னை வெற்றி கொண்ட தோர்
ஒப்பற்ற வெற்றியை உடையவனே!பெற்றி இது - (எங்கள் பிறப்பிற்குரிய)
தன்மை இது; பெற்றது ஒர் பெற்றியின் - நான் அடைந்துள்ள பிறவியின்
தன்மைப்படி; குற்றம் உற்றிலன் - யாதொரு குற்றமும் செய்திலேன்; அது நீ
கோடி -
அதனை நீ மனத்தில் கொள்வாய்; என - என்று; சொற்ற சொல்
துறைக்கு-
வாலி சொன்ன சொற்களின் போக்கிற்கு; உற்றது சொல்லுவான் -
பொருத்தமான மறுமொழியை (இராமன்) சொல்லத் தொடங்கினான்.

     வெற்றி உற்றது ஓர் வெற்றியினாய் - வெற்றிகளுள்ளும் மேம்பட்ட
வெற்றியை உடையவனே என்றும் பொருள் கொள்வர்.  எவராலும் வெல்ல
முடியாத தன்னை இராமன் வென்றதால் அவ் வெற்றியைப் பெரு வெற்றியாகக்
குறித்தான் என்க.  'கொள்தி' என்பது கோடி என நின்றது.  கோடி - கொள் +
தி.  தி முன்னிலை ஏவல் விகுதி.  மற்று.  ஆல் என்பன அசைகள். தன்
பிறப்பின் இயல்பு காட்டி வாலி, தான் குற்றமற்றவன் என உரைத்தான்.    114