4102. ' ''வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்!
தரை மேலாய்! உறு தன்மை ஈது?'' எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும், ஒன்று
உரையாய், என்வயின் ஊனம் யாவதோ?

     தரை மேலாய் - தரை மீது கிடப்பவனே! வரை ஆர் தோள் -
மலைகள் போல் விளங்கும் உனது தோள்கள்; பொடி ஆட வைகுவாய் -
புழுதி படியக் கிடப்பவனே!உறு தன்மை ஈது என - நீ அடைந்த கதி
இதுவோ என்று; கரையாதேன் - கரைந்துருகப் பெறாதவளாகியயான்; இடு
பூசல் கண்டும் -
(உன் எதிரில் நின்று) கதறும் அழுகையைப் பார்த்தும்;
ஒன்று உரையாய் -
(என் துயர் போக்கும் வண்ணம்) மாற்றம் ஒன்றும்
கூறினாய் அல்லை.  என் வயின் ஊனம் யாவதோ - (இவ்வாறு நீ என்னை
வெறுத்தொதுக்க) என்னிடத்தில் உள்ள குற்றம் யாதோ?

     பொடியாடல் - தூசி படிந்திருத்தல்.  மலை போன்ற தோளினை ''வரை
சேர் தோளிடை'' (4098) என முன்னரும் கூறியது காண்க.  தன் துயர் பொறா
வாலி, இப்பொழுது தன் துயர் நீக்கும் வண்ணம் பேசாதிருத்தலை நோக்கித்
தாரை 'என்னிடம் உள்ள குற்றம் யாதெனக் கேட்டுப் புலம்பினாள்.  'என்னுறு
துயர் கண்டும் இடருறும் இவள் என்னீர்.  பொன்னுறு நறுமேனி பொடியாடிக்
கிடப்பதோ' (சிலப்-ஊர்சூழ்.வரி39.40) எனப் புலம்பிய கண்ணகியின் துயரம்
ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. வாலிக்கு ஏற்பட்ட கொடிய நிலையைத்
'தரைமேலாய்' எனும் தொடர்உணர்த்தும்.                         168