4107.'சொற்றேன், முந்துற; அன்ன
      சொல் கொளாய்;
''அற்றான், அன்னது
      செய்கலான்'' எனா,
உற்றாய், உம்பியை; ஊழி
      காணும் நீ,
இற்றாய்; நான் உனை
     என்று காண்கெனோ?

     முந்துறச் சொற்றேன் - (சுக்கிரீவனுடன் போர் செய்ய வருவதற்கு)
முன்னதாகவே (இராமன் சுக்கிரீவனுக்குத் துணையாகப் போரிட வந்துள்ளான்
என்ற செய்தியை) நான் சொன்னேன்.  அன்ன சொல் கேளாய் -  அந்த
வார்த்தையைக் ஏற்றுக் கொள்ளாமல்; அற்றான் - விருப்பு வெறுப்பற்ற
இராமன்; அன்னது செய்கலான் - அவ்வாறு முறையற்ற செயலைச்
செய்யமாட்டான்; எனா - என்று கூறி; உம்பியை உற்றாய் - உன் தம்பியை
(எதிர்த்துப் போரிட) வந்தாய்; ஊழி காணும் நீ - ஊழிக் கால முடிவையும்
கண்டு வாழவேண்டிய நீ; இற்றாய் - இறந்துவிட்டாய்.  நான் உனை என்று
காண்கெனோ -
இனி நான் உன்னை எப்பொழுது காண்பேனோ?

     இராமன் துணை பெற்று வந்தான் எனத் தாரை கூறிய மொழிகள் - 3958,
3964ல் காண்க. அன்னது செய்கலான்.  3956 முதல் 3965 முடிய உள்ள
பாடல்களின் கருத்துக்கள்.  'ஊழி காணும் நீ' எனத் தாரை நினைத்தது போல்,
மண்டோதரியும் 'ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என
ஏமாப்புற்றேன்' (9943) என எண்ணியதுகாண்க.                      173