4109. | 'தகை நேர் வண் புகழ் நின்று, தம்பியார், பகை நேர்வார் உளர் ஆன பண்பினால், உக நேர் சிந்தி உலந்து அழிந்தவால்; மகனே! கண்டிலையோ, நம் வாழ்வு எலாம்? |
மகனே - (தாரை, அங்கதனை முன்னிலைப்படுத்தி) மைந்தனே! தம்பியார் - (உன் தந்தைக்குத்) தம்பியரான சுக்கிரீவர்; தகைநேர் - பெருமை பொருந்திய; வண் புகழ் நின்று - (உன் தந்தையின்) சிறந்த புகழுக்கேற்பப் பணிந்து நின்று; பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் - (பின்பு உறவு நிலைமாறி) அவரோடு பகைமை கொள்பவர் தன்மையினால்; உக - உன் தந்தை இறந்துபடி; நம் வாழ்வு எலாம் - நமது சிறப்பான வாழ்க்கையெல்லாம்; நேர் சிந்தி உலந்து அழிந்த - தகுதி கெட்டு அழிந்துவிட்டன. கண்டிலையோ - இதனை நீ காண வில்லையோ? இஃது அங்கதன் அவ்விடத்து இல்லாவிடினும் அவனை முன்னிலை யாக்கித் தாரை புலம்பியது. தம்பியார் - பன்மை விகுதியில் கூறியது வெறுப்பினால் என்க. வஞ்சப் புகழ்ச்சி. வண்புகழ் நின்று என்பதற்கு (தமையனின்) புகழின் ஒளியிலே நிலைத்து வளர்ந்து எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். அழிந்த; பன்மை வினை முற்று. ஆல் - அசை. அழிந்தவால் என்பது பாடமாற்றம். 175 |