4131. | ''இன்னது தகைமை'' என்ப, இயல்புளி மரபின் எண்ணி, மன் அரசு இயற்றி, என் கண் மருவுழி மாரிக் காலம் பின்னுற முறையின், உன்தன் பெருங் கடற் சேனையோடும் துன்னுதி; போதி' என்றான், சுந்தரன். அவனும் சொல்வான்: |
இன்னது தகைமை என்ப - மேற்கூறிய இவை (அரசர்க்கு) முறை மையாமென்று (அறிஞர்) கூறுவர். இயல்புளி - (ஆதலால்) நூல்களில் கூறிய இயல்பின்படி; மரபின் எண்ணி - முறைப்படி ஆராய்ந்து; மன் அரசு இயற்றி - சிறப்பாக ஆட்சியை நடத்தி; மாரிக் காலம் பின்னுற - மழைக்காலம் கழிந்த பின்பு; என் கண் மருவுழி - என்னிடம் வரும் பொழுது; முறையின் - முறைப்படி; உன்தன் பெருங்கடல் சேனையோடும் - உனது பெரிய கடல் போன்ற சேனையோடு; துன்னுதி - (என்னிடம்) வந்து; சேர்வாய்; போதி - இப்பொழுது செல்வாய்; என்றான் சுந்தரன் - என்று கூறினான் அழகான இராமன்; அவனும் சொல்வான் - (அதுகேட்டு) அச்சுக்கிரீவனும் கூறுவான்: இராமன் சுக்கிரீவனுக்குக் கூறிய அரசியலுக்குரிய அறவுரைகளை வசிட்டர் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்களோடு (1417, 1424) ஒப்பு நோக்குக. இவ்வித அரசியல் அறவுரை சுக்கிரீவன் முதலானோர்க்கு இராமன கூறியதாக வான்மீகத்தில் இல்லை. சீதையைத் தேடுதற்கு மழைக்காலம் வசதியற்றதாக இருக்குமாதலின் 'மாரிக் காலம் பின்னுற' என்றான். தமிழில் ஆவணி, புரட்டாசி மாதங்கள் கார்காலம் என்பர். எனினும், ஆவணிக்கு முன்னரும், புரட்டாசிக்குப் பின்னரும் கார்காலத் தொடர்பு இருப்பதால் இந்நான்கு மாதங்களையும் மாரிக்காலம் என்றே வழங்குவர். வான்மீகத்திலும் இவ்வாறே கொள்ளப்பட்டது. 'சுந்தரன்' என இராமன் குறிக்கப் பெறல் காண்க. 17 |