4136. | '' தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப, தான் தன் ஆவிபோல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் மேவினான், இராமன்'' என்றால், ஐயா! இவ் வெய்ய மாற்றம், மூவகை உலகம் முற்றும் காலத்தும், முற்ற வற்றோ? |
தேவி - என் தேவியான சீதை; வேறு - தனியாய்; அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப - இராவணன் கொண்டுபோய் வைத்த காவலில் இருக்க; தான் தன் - தான், தன்னுடைய; ஆவிபோல் துணைவரோடும் - உயிர் போன்ற நண்பர்களோடு; அளவிடற்கு அரிய இன்பம் - அளவிடமுடியாத அரிய இன்பத்தை; இராமன் மேவினான்- இராமன் விரும்பினான்; என்றால்- என்று மக்கள் கூற நேர்ந்தால்; ஐய - ஐயனே!இவ்வெய்ய மாற்றம் - இந்தக் கொடிய சொல்; மூவகை உலகம் - (மேல், கீழ், நடு எனும்) மூன்று வகைப்பட்ட உலகங்களும்; முற்றும் காலத்தும்- அழியுங் காலத்திலும்; முற்றவற்றோ - முடிய வல்லதாகுமோ? (அந்தப் பெரும்பழி உலகங்கள் அழிந்தாலும் அழியாது). உலகம் முற்றும் காலம் - ஊழிக்கால முடிவு. அரக்கனது சிறைக் காவலில் இருக்க. இராமன் தன் நண்பர்களோடு இன்பங்களை விழைந்தான் என்று உலகம் கூறும் பழிச்சொற்கு இராமன் அஞ்சினான் என்க. மேவுதல் - விரும்புதல். 22 |