4168. பரஞ்சுடர்ப் பண்ணவன்,
      பண்டு, விண் தொடர்
புரம் சுட விடு
      சரம் புரையும் மின்இனம்,
அரம் கடப் பொறி
      நிமிர் அயிலின், ஆடவர்
உரம் சுட உளைந்தனர்,
      பிரிந்துளோர் எலாம்.

     பரஞ்சுடர்ப் பண்ணவன் - பரஞ்சோதியாகிய சிவபிரான்; பண்டு
விண்தொடர் புரம் சுட -
பண்டைக்காலத்து விண்ணில் தொடர்ந்து இயங்கிய
திரிபுரங்களை எரிக்க; விடு சரம் புரையும் - தொடுத்த அம்பு போன்ற; மின்
இனம் -
மின்னல்கள்; அரம் சுட - அரத்தினால் அராவப்பட்டு;
பொறி நிமிர் அயிலின் - ஒளி வீசுகின்ற வேர்ப் படைகள் போல;
ஆடவர் உரம் சுட -
(தலைவியரைப் பிரிந்த) ஆடவர்களின் நெஞ்சை
எரிப்ப; பிரிந்துளோர் எலாம் - பிரிந்தவர்கள் எல்லாம்; உளைந்தனர் -
வருந்தினர்.

     சிவபிரான் புரம் எரிக்க அம்பு போன்ற மின்னல்கள் தலைவியரைப்
பிரிந்த ஆடவர்களை வருத்தின.  பரஞ்சுடர்ப் பண்ணவன் என்றது
சிவபிரானை.  விண் தொடர் புரம் - வானில் திரிந்து கொண்டு உயிர்களை
அழித்து வந்த திரிபுரங்கள். உரம் - மார்பு, இடவாகு பெயராய் நெஞ்சைக்
குறித்தது.                                                     21