4169. | பொருள் தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு, உருள்தரு தேர்மிசை உயிர்கொண்டு உய்த்தலான், மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட, கருடனைப் பொருவின் - கால மாரியே. |
பொருள் தரப் போயினர் - செல்வம் ஈட்டுதற் பொருட்டு வேற்று நாடுகளுக்குச் சென்ற தலைவரை; பிரிந்த - பிரிந்த; பொய் உடற்கு- (உயிர்த் துணைவரைப் பிரிந்ததால்) உயிர்நீங்கிய உடம்பு மாத்திரமாய் உள்ள தலைவியர்க்கு; உருள்தரு தேர்மிசை - உருளும் தன்மை கொண்ட சக்கரங்களை உடைய தேரின் மேல்; உயிர்கொண்டு - (பிரிந்த தலைவர்களாகிய) உயிர்களை மீட்டு வந்து; உய்த்தலான் - சேர்த்தலால்; கால மாரி - கார் காலத்து மழை மேகங்கள்; மருள்தரு பிரிவின் நோய் - மயக்கத்தைச் செய்கின்ற பிரிவுத் துன்பங்களாகிய; மாசுணம் கெட - பெரிய பாம்புகள் அழியும்படி; கருடனை பொருவின - (வந்த) கருடனை ஒத்தன முன்னோர் ஈட்டிய பொருளில் வாழாது தானே பொருளீட்டி வந்து வாழ்தல் சிறப்பெனக் கருதிப் பண்டைத்தமிழர் வேற்றுநாடுகளுக்குச் சென்றனர். 'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி' (குறுந் - 63), 'புணரின் புணராது பொருளே பொருள் வயின், பிரியிற் புணராது புணர்வே' (நற் - 16) என்பன காண்க. பிரிந்த தலைவன் கார்காலத்தே திரும்பி வருவான். அங்ஙனம் பொருள் ஈட்டி, வினை முடித்து மீளும் தலைவன் தேவை விரைந்து செலுத்துமாறு கூறும் செய்திகளை முல்லைத்திணைப் பாடல்களில் காணலாம். கார்காலத்தில் தலைவன் தேர்மீது திரும்புவான் ஆதலின் 'உருள்தரு தேர்மிசை உயிர்கொண்டு உய்த்தலான்' என்றார். தலைவரை உயிராகக் கருதுவதால் தலைவியின் உடம்பு பொய்உடம்பாயிற்று. 'பூண்ட மெய் உயிரே நீ அப்பொய் உயிர் போயே நின்ற ஆண்டகை' (5304) என்றது காண்க. உடம்பினின்று உயிர் பிரிக்கக் கூடியது அன்றாயினும் தலைவன் அல்லது தலைவியை உயிர் எனக் கூறுதல் மரபாகும். 'ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எவ்வுயிர் விடும் இராமன் (5304) என்பதில் இராமனுக்குச் சீதை உயிர் என்றது காண்க. பாம்பு கருடனால் அழிவது இயல்பு. அதனால் பிரிவு நோயாகிய மாசுணம் அழிய வந்த கருடன்போல் கார் காலமழை விளங்கியது என்றார். இப்பாடலில் ஏது உவமை அணி அமைந்தது. மாரி இடப்பன்மையால் பலவாதல் பற்றிப் பொருவின எனப் பன்மையால் கூறினார். 22 |