குயில்கள் குரல் ஒடுங்கின

4193. 'நீயிர், அன்னவள்
     குதலையிர்ஆதலின், நேடி,
போய தையலைத் தருதிர்'
      என்று, இராகவன் புகல,
தேயம் எங்கணும் திரிந்தன
      போந்து, இடைத் தேடிக்
கூய ஆய், குரல் குறைந்தபோல்
     குறைந்தன - குயில்கள்.

     நீயிர் - 'நீங்கள்; அன்னவள் குதலையிர் ஆதலின் - அந்தச் சீதை
யின் மழலை போன்ற இனிமையான குரலை உடையவர்களாதலால்; போய
தையலை -
(சூழ்ச்சியால்) என்னைப் பிரிந்த சீதையை; நேடித் தருதிர்
என்று-
தேடித் தருவீர்கள்' என்று; இராகவன் புகல - இராமன் (குயில்களை
நோக்கிக்) கூற; குயில்கள் - அக்குயில்கள்; தேயம் எங்கணும் - (அதற்கு
இணங்கி) எல்லா இடங்களிலும்; திரிந்தன போந்து - திரிந்து வந்து; இடைத்
தேடி -
அந்தந்த இடங்களில் அவளைத் தேடி; கூய ஆய் - உரக்கக் கூவி
அழைத்தனவாய்; குரல் குறைந்த போல - குரல் கம்மின போல;
குறைந்தன- (கார்காலத்தில்) குரல் ஒடுங்கின.

     கார் காலத்தில் குயில் கூவாமை இயல்பு. கார்காலத்தில் குயில் கூவாமை
'ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள்' (4173) என முன்
கூறியதாலும் 'கருங்குயில் கையற மாமயில் ஆல' (கார்.நாற்.16) என
வருதலாலும் அறியலாம்.  குதலை - குழந்தைப் பருவத்திற்கே உரியதாயினும்
மகளிர்க்கு எல்லாப் பருவத்திலும் பொருந்தியதாகக் கூறுதல் கவிஞர் இயல்பு.
பறவையிடம் பேசுவதாகக் கூறுவது கவிமரபாகும்.  குயில்கள் குயில்
மொழியாளைத் தேடின என்றதன் நயன் காண்க.                      46