4222. நிறம் கருகு கங்குல், பகல்,
      நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை
      முனி அந்தணரின், ஆலிப்
பிறங்கு அரு நெடுந் துளி
     படப் பெயர்வு இல்குன்றில்,
உறங்கல, பிறங்கல் அயல்
      நின்ற, உயர் வேழம்.

     நிறம் கருகு கங்குல் - நிறம் கறுத்துத் தோன்றுகின்ற இரவுக்
காலத்திலும்; பகல் - பகல் வேளையிலும்; நின்ற நிலை நீவா - தாம் நின்ற
தவநிலையிலிருந்தும் நீங்காமல்; அறம் கருது சிந்தை - அறத்தையே
நினைக்கின்ற சிந்தையுடையவர்களாய்; முனி அந்தணரின் - (எல்லாப்
பற்றுக்களையும்) வெறுத்தொதுக்கிய முனிவர்கள்போலவும்.  பிறங்கு அரு
ஆலி நெடுந்துளி பட -
ஆலங்கட்டிகளோடு விளங்குகின்ற அரிய மழையின்
பெரிய மழைத்தாரைகள் தம் மேல் பட; பெயர்வுஇல் குன்றில் - அசைதல்
இல்லாத குன்று போலவும்; உயர்வேழம் - உயர்ந்த யானைகள்; உறங்கல -
உறக்கம் கொள்ளாதனவாய்; பிறங்கல்  அயல் நின்ற - மலைப்பக்கங்களில்
அசையாது நின்றன.

     மழைகள் உறங்காமல், அசையாமல் இருந்த யானைகளுக்கு
முனிவர்களும், மலையும் உவமை.  அந்தணரைப் போல உறங்காமலும், குன்று
போல அசையாமலும் என முறையே இயைந்து பொருள்படுதல் பற்றி முறை
நிரல் நிறை அணி எனப்படும். பெயர்வு இல் குன்று - 'அசலம்' என மலைக்கு
ஒரு பெயராதல் காண்க.  மழைக்காலத்து உறங்கா நிலையில் மலையை
அடுத்து அசையாது யானைகள் நின்று கொண்டிருந்தன.  குறிஞ்சி நிலத்துக்
கூதிர்காலக் காட்சி இப் பாடலில்கூறப்பெற்றது.                      75