4228. தாமரை மலர்த் தவிசு
      இகந்து, தகை அன்னம்,
மாமரம் நிரைத்  தொகு
      பொதும்பருழை வைக;
தே மரம் அடுக்கு
      இதணிடைச் செறி குரம்பை,
தூ மருவு எயிற்றியரொடு
      அன்பர் துயில்வுற்றார்.

     தகை அன்னம் - அழகிய அன்னப்பறவைகள்; தாமரை மலர்த் தவிசு
இகந்து -
தாமரை மலராகிய தங்கள் இருப்பிடத்தை விட்டு நீங்கி; மா மரம்
நிரைதொகு -
பெரிய மரங்கள் வரிசையாகத் திரண்ட; பொதும்பர் உழை
வைக -
சோலையில் சென்று தங்க; தேமரம் அடுக்கு - நறுமணம் மிக்க
மரக்கட்டைகளை அடுக்கியமைத்த; இதணிடை செறி குரம்பை - பரணில்
பொருந்திய குடிசையில்; தூ மருவு எயிற்றியரொடு - வெண்ணிறம்
பொருந்திய பற்களையுடைய வேட்டுவப் பெண்களுடனே; அன்பர்
துயில்வுற்றார் -
அவர்களின் அன்புமிக்க கணவர்கள் உறங்கினார்கள்.

     குளிரால் வருந்திய அன்னம் நீரிலுள்ள தாமரை மலரை விட்டுக் குளிர்
இல்லாத உயர்ந்த கிளைகளை உடைய மரங்கள் செறிந்த சோலையில் சென்று
தங்கியது; பறவைகள் வாராத மழைக்காலத்தில் தினைப்புனம் காக்கும்
வேலையின்மையால் வேட்டுவ மகளிரும வேடர்களும் குளிர்நீங்கப் பரண்
குடிசைகளில் உறங்கினர்.  தவிசு - ஆசனம், தேமரம் - சந்தனம் முதலிய
மரங்கள்.  வைகத் துயில்வுற்றார் எனக் காரண காரியத்தொடர்பின்றிச்
செயவெனெச்சம் வினை கொண்டுமுடிந்தது.                         81