4241. | 'விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும் சுட்டபோது, இமையவர் முதல தொல்லையோர் பட்டபோது, உலகமும் உயிரும் பற்று அறக் கட்டபோது, அல்லது, மயிலைக் காண்டுமோ? |
விட்ட போர் வாளிகள் - (யான் இனி) போரில் தொடுக்கின்ற அம்புகள்; விரிஞ்சன் விண்ணையும் - பிரமனது சத்திய லோகத்தையும்; சுட்ட போது (அல்லது) - எரிப்பதோடல்லாமல்; இமையவர் முதல தொல்லையோர் - தேவர்கள் முதலான பழமையானவர்களை; பட்ட போது (அல்லது)- ஒழிப்பதோடல்லாமல்; உலகமும் உயிரும் - உலகங்களையும் உயிர்களையும்; பற்று அறக் கட்டபோது அல்லது - வேரற அழித்துத்தான்; மயிலைக் காண்டுமோ - மயில் போன்ற சீதையைக் காண முடியுமோ? 'விட்ட' என்பது விரைவு பற்றி வந்த காலவழுவமைதி. அல்லது என்பது கடைநிலை விளக்காய்ச் சுட்டபோதல்லது, பட்ட போதல்லது என இயையும் சீதையின் மென்சாயல் பற்றி 'மயில்' எனக் கூறினன். மயில் - உவமை ஆகுபெயர். 94 |