4244.'திரைசெய் அத் திண் கடல்,
      அமிழ்தம் செங் கணான்
உரைசெயத் தரினும், அத்
      தொழில் உவந்திலன்;
வரை முதல் கலப்பைகள்
      மாடு நாட்டி, தன்
குரை மலர்த் தடக்
      கையால் கடைந்து கொண்டனன்.

     திரைசெய் அத்திண்கடல் - அலைகள் வீசுகின்ற அந்த வலிய
பாற்கடல்; அமிழ்தம் - தன்னிடமுள்ள அமிழ்தத்தை; செங்கணான் - சிவந்த
கண்களையுடைய திருமால்; உரைசெய - (கொடு என்று) சொன்ன அளவிலே;
தரினும் -
கொடுக்கக் கடவதாயினும்; அத்தொழில் - அங்ஙனம் ஆணையால்
எளிதில் பெறுவதை; உவந்திலன் - விரும்பாதவனாய்; வரை முதல்
கலப்பைகள்  -
மந்தரமலை முதலிய கருவிகளை; மாடுநாட்டி -
அக்கடலிடத்து நாட்டி; தன் குரை மலர்த் தடக்கையால் - (தோள் வளை
முதலிய) அணிகலன்கள் ஒலிக்கப் பெற்ற செந்தாமரை மலர்போன்ற பெரிய
கைகளால்; கடைந்து கொண்டனன் - (அக்கடலைக்) கடந்தே அமிழ்தத்தைப்
பெற்றுக் கொண்டான்.

     திருமால் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் பாற்கடலிடத்து எளிதில்
அமிழ்தத்தைப் பெறலாம்; எனினும் அங்ஙனம் பெறாது.  மத்து முதலிய
கருவிகளைக் கொண்டு தன் கையால் கடைந்தே அமிழ்தத்தைப் பெற்றான்.
அதுபோன்றே இராமன் நினைத்தால் வேறொருவர் துணையின்றியே உலகையும்
உயிர்களையும் அழித்துப் பிராட்டியைக் காணும் ஆற்றல் பெற்றவன்; எனினும்
வானரப்படைகளின் துணை கொண்டு தேடி முயன்று பகைவரை வென்று
சீதையைக் காண்பதே முறையானது என்று இலக்குவன் உரைத்தான்.
இச்செய்யுள் பிறிது மொழிதலணி.  திருமால் பாற்கடல் கடைந்ததை
''வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல் வண்ணன்
பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே' (சிலப் - ஆய்ச்சி.32) என்ற
அடிகளும் உணர்த்தும்.  'பூவிற்குத் தாமரையே' (திருவள்ளுவ மாலை. 38)
'பூவினிற் கருங்கலம் பொங்கு தாமரை' (தேவா. 1182. 2) என்றாராகலின் மலர்
இங்கே தாமரையைக் குறித்து நின்றது.  அ - பண்டறிசுட்டு.  தேவரும்
அரக்கரும் பல காலம் கடைந்த கடலாதலின் 'திண்கடல்' எனப்பட்டது.  வரை
முதல் கலப்பைகள் - மந்தரமலை, வாசுகி, மேரு முதலியன.  செங்கணான் -
சிவந்த வரிகள் படர்ந்த கண்களை உடையவன்.  இங்கே திருமாலைக்
குறித்தது.  'கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனை'
என்கிறது சிலப்பதிகாரம் (ஆய்ச்சி. 36) குரைத்தல் - ஒலித்தல் - கடகம்,
வாகுவலயம் போன்ற அணிகள் ஒலிக்கப்பெறல்; வருந்திக் கடைதற்குப்
பொருந்தாத மென்மையான கை என்பதை மலர்க்கை' என்ற தொடர்
உணர்த்திற்கு.  எத்துணை ஆற்றலுடையராயினும் ஒரு செயலைத் திறம்படப்
புரியக் காலமும் கருவியும் இன்றியமையாதன என்பது இப்பாடலில்
உணர்த்தப்பட்டது.  'ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால்
செயின்' (குறள் - 484) என்றதுகாண்க.                            97