சுக்கிரீவன் வாராமையால் இராமன் சினந்து,
இலக்குவனை அனுப்புதல்

4269. அன்ன காலம்
      அகலும் அளவினில்,
முன்னை வீரன்,
      இளவலை, 'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின்
      ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்;
      என் செய்தவாறுஅரோ?

     அன்ன காலம் - அத்தன்மையுடைய கூதிர்ப்பருவம்; அகலும்
அளவினில் -
நீங்கும் அளவில்; முன்னை வீரன் - மூத்தவனும் வீரனுமான
இராமன்; இளவலை - தன் தம்பியான இலக்குவனை நோக்கி;
மொய்ம்பினோய் - வலிமைமிக்கவனே! சொன்ன எல்லையின் ஊங்கினும் -
(முன்பு நான்) குறித்த நான்கு மாதத் தவணை கழிந்த பின்பும்; மன்னன்
தூங்கினன் வந்திலன் -
அச் சுக்கிரீவ அரசன் தாமதப்படுத்துவதை
மேற்கொண்டு இங்கு வந்து சேரவில்லை; செய்த ஆறு என் - அவன் செய்த
செயல் தான் என்ன?

     கார்த்திகை மாதத்தில் வருவதாகச் சொன்ன சுக்கிரீவன் வராததால்,
இராமன் இலக்குவனைநோக்கிச் சுக்கிரீவன் இவ்வாறு வராமல் காலம்
தாழ்த்துகிறானே என்றான் என்பது.

தூங்குதல் - செயலைத் தாழ்த்துதல், தாமதப்படுத்துதல், 'தூங்குக தூங்கிச்
செயற்பால' என்பதில் (குறள் 672) இப்பொருள் அமைதல் காண்க.  முன்னை -
முன் பிறந்தவன்; முதன்மையான வீரர்களுள் தலைமையுடையவன். மொய்ம்பு -
தோள், வலிமை.                                                 1