4273. 'நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.

     நஞ்சம் அன்னவரை - நஞ்சு போன்ற கொடியவர்களை; நலிந்தால்
அது வஞ்சமன்று -
தண்டித்தால் அது கொடுமையாகாது; மனு வழக்கு
ஆதலால் -
(அவ்வாறு நலிவது) மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதியாதலால்;
(இதை);  அஞ்சில் ஐம்பதில் - ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும்; ஒன்று
அறியாதவன் -
தக்கது தகாதது என்பதனை அறி யாதவனான அச்
சுக்கிரீவனது; நெஞ்சில் நின்று நிலாவ - மனத்தில் நன்றாகப் பதிந்து
விளங்கும்படி; நிறுத்துவாய் - (சொல்லி) நிலை நிறுத்துவாய்.

     கொடியவரைக் கொல்லாவிட்டால் உலகம் பலவாறு நலிவுபட்டு வருந்தும்;
ஆதலால், நல்லவர்களைப் பாதுகாத்தற்பொருட்டுத் தீயவரை அழித்தல் தருமச்
செயலாம் என்பது.  அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் - அஞ்சிலும்
(வயது) ஒன்று அறியாதவன்; ஐம்பதிலும் ஒன்று அறியாதவன்; அதாவது
இளமையிலும் முதுமையிலும் செய்வது அறியாதவன்.  'ஆறிலறியார் நூறிலும்
அறியார்'; 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டில்' என்னும் பழமொழிகள் இங்கு
நினைக்கத் தக்கன.  உலக வழக்கு நவிற்சி அணி. அஞ்சு -போலி.        5