4273. | 'நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால், அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன் நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய். |
நஞ்சம் அன்னவரை - நஞ்சு போன்ற கொடியவர்களை; நலிந்தால் அது வஞ்சமன்று - தண்டித்தால் அது கொடுமையாகாது; மனு வழக்கு ஆதலால் - (அவ்வாறு நலிவது) மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதியாதலால்; (இதை); அஞ்சில் ஐம்பதில் - ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும்; ஒன்று அறியாதவன் - தக்கது தகாதது என்பதனை அறி யாதவனான அச் சுக்கிரீவனது; நெஞ்சில் நின்று நிலாவ - மனத்தில் நன்றாகப் பதிந்து விளங்கும்படி; நிறுத்துவாய் - (சொல்லி) நிலை நிறுத்துவாய். கொடியவரைக் கொல்லாவிட்டால் உலகம் பலவாறு நலிவுபட்டு வருந்தும்; ஆதலால், நல்லவர்களைப் பாதுகாத்தற்பொருட்டுத் தீயவரை அழித்தல் தருமச் செயலாம் என்பது. அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் - அஞ்சிலும் (வயது) ஒன்று அறியாதவன்; ஐம்பதிலும் ஒன்று அறியாதவன்; அதாவது இளமையிலும் முதுமையிலும் செய்வது அறியாதவன். 'ஆறிலறியார் நூறிலும் அறியார்'; 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டில்' என்னும் பழமொழிகள் இங்கு நினைக்கத் தக்கன. உலக வழக்கு நவிற்சி அணி. அஞ்சு -போலி. 5 |