இலக்குவன் கிட்கிந்தை செல்லுதல் 4277. | ஆணை சூடி, அடி தொழுது, ஆண்டு, இறை பாணியாது, படர் வெரிந் பாழ்படாத் தூணிபூட்டி, தொடு சிலை தொட்டு, அருஞ் சேணின் நீங்கினன் - சிந்தையின் நீங்கலான். |
ஆணைசூடி - (இராமனின்) கட்டளையைத் தலைமேற்கொண்டு; அடிதொழுது - அவனது திருவடிகளை வணங்கி; ஆண்டு இறை பாணியாது - அந்த இடத்தில் சிறு நொடியும் தாமதிக்காமல்; படர் வெரிந் - விரிந்த (தனது) முதுகில்; பாழ்படாத் தூணி பூட்டி - (அம்புகள்) குறையாத அம்புப் புட்டிலைக் கட்டிக்கொண்டு; தொடுசிலை தொட்டு - தொடுப்பதில் வல்ல வில்லைக் கையில் பிடித்து; சிந்தையின் நீங்கலான் - மனத்தில் இராமனை நினைந்து கொண்டே; அருஞ் சேணின் நீங்கினன் - செல்வதற்கு அரிய நீண்ட வழியில் சென்றான். இராமன்பால் இலக்குவன் கொண்ட பக்திச் சிறப்பு இப் பாடலாற் புலனாகிறது. சிந்தையின் நீங்கலான் - இராமனது மனத்திலிருந்து நீங்காத அன்புத்தம்பி என்றும் கூறலாம். சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான்: முரண். 9 |