இலக்குவன் கிட்கிந்தை செல்லுதல்

4277. ஆணை சூடி, அடி
     தொழுது, ஆண்டு, இறை
பாணியாது, படர்
      வெரிந் பாழ்படாத்
தூணிபூட்டி, தொடு
      சிலை தொட்டு, அருஞ்
சேணின் நீங்கினன் -
      சிந்தையின் நீங்கலான்.

     ஆணைசூடி - (இராமனின்) கட்டளையைத் தலைமேற்கொண்டு;
அடிதொழுது -
அவனது திருவடிகளை வணங்கி; ஆண்டு இறை பாணியாது
-
அந்த இடத்தில் சிறு நொடியும் தாமதிக்காமல்; படர் வெரிந் - விரிந்த
(தனது) முதுகில்; பாழ்படாத் தூணி பூட்டி - (அம்புகள்) குறையாத அம்புப்
புட்டிலைக் கட்டிக்கொண்டு; தொடுசிலை தொட்டு - தொடுப்பதில் வல்ல
வில்லைக் கையில் பிடித்து; சிந்தையின் நீங்கலான் - மனத்தில் இராமனை
நினைந்து கொண்டே; அருஞ் சேணின் நீங்கினன் - செல்வதற்கு அரிய
நீண்ட வழியில் சென்றான்.

     இராமன்பால் இலக்குவன் கொண்ட பக்திச் சிறப்பு இப் பாடலாற்
புலனாகிறது.  சிந்தையின் நீங்கலான் - இராமனது மனத்திலிருந்து நீங்காத
அன்புத்தம்பி என்றும் கூறலாம். சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான்:
முரண்.                                                     9