4289. | தித்தியாநின்ற செங் கிடை வாய்ச்சியர் முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன், பித்தும், மாலும், பிறவும், பெருக்கலால், மத்த வாரணம் என்ன மயங்கினான்; |
தித்தியாநின்ற - தித்திக்கின்ற; செங்கிடை வாய்ச்சியர் - செங்கிடை போலச் சிவந்த இதழ்களையுடைய பெண்களின்; முத்த வாள் நகை - முத்துப்போல வெண்ணிறமான புன்னகை செய்கின்ற; முள் எயிற்று - கூர்மையான பற்களிலிருந்து; ஊறுதேன் - சுரக்கின்ற தேன்; பித்தும் மாலும்- பித்தினையும் மயக்கத்தையும்; பிறவும் - காமம், மதம், மறதி, சோர்வு, துயில்முதலிய தாமசக் குணச் செயல்களையும்; பெருக்கலான் - மிகுதிப்படுத்துவதனால்; மத்த வாரணம் என்ன - மதங்கொண்ட யானைபோல; மயங்கினான் - அறிவு அழிந்தவனும். சுக்கிரீவன், மகளிரின் இதழ் அமுதத்தை என்றைக்கும் சுவை தருவதெனக் கருதி மயங்கிக் கிடந்தான் என்பது. செங்கிடை என்பது சிவந்த நிறம் உடைய ஒருவகை நெட்டி. தேன் - உவமையாகுபெயர். - தித்தியா நின்ற தேன் என இயைக்கவும். 21 |