4299. | 'தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன் ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது பாவியாது, பருகுதிர் போலும், நும் காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர். |
தேவி நீங்க - (தன்) மனைவியான சீதை பிரிந்திருக்க; அத் தேவ ரின் சீரியோன் - (அத்துயரத்தால்) தேவர்களைக் காட்டிலும் சிறப்புள்ளவனான அந்த இராமன்; ஆவி நீங்கினன் போல் அயர்வான் - உயிர் நீங்கியவன் போலத் தளர்ந்துள்ளான்; அது பாவியாது - அதை (நீங்கள்) மனத்தில் கருதிப் பார்க்காமல்; நும் நாள் காவி மலர்க் கண்ணியர் - காலை பூத்த கருங் குவளை போன்ற கண்களையுடைய உங்கள் மனைவியரின்; காதல் நீர் - அன்பு வழிப்பட்ட இன்பத் தேனை; பருகுதிர் போலும் - குடித்து மகிழ்கின்றீர் போலும்! சிற்றின்ப வயப்பட்டுக் கடமையை மறந்த சுக்கிரீவனது செயலை மனத்திற் கொண்டு தாரை இவ்வாறு பேசலானாள் என்பது. 31 |