4306. பரிய மா மதிலும், படல் வாயிலும்
சரிய வீழ்ந்த; தடித்தின் முடித் தலை
நெரிய, நெஞ்சு பிளகக, நெடுந் திசை
இரியலுற்றன; இற்றில இன் உயிர்,

     (இவ்வாறு)பரிய மா மதிலும் - பருத்து உயர்ந்த அம் மதிலும்; படல்
வாயிலும் -
அகன்று நின்ற நகர வாயிலும்; சரிய வீழ்ந்த  - சாய்ந்து
விழுந்ததால் உண்டாகிய; தடித்தின் முடித்தலை நெரிய - இடியால் (தங்கள்)
தலையிடம் நொறுங்கவே; நெஞ்சு பிளப்ப - (அம் மதிலைச் சார்ந்து நின்ற
வானரங்கள்) நெஞ்சு உறுதியழிந்து கலங்கி; நெடுந்திசை - திசைகள் தோறும்;
இரியல் உற்றன -
நெடுந்தூரம் ஒடின; இன்னுயிர் இற்றில - (அதனால்)
இனிய உயிர் அழியாதனவாயின.  (தப்பிப் பிழைத்தன)

     மதில்: ஏணி கொண்டும் ஏறமுடியாத உயர்வும், புறத்தே உள்ளவர்க்குத்
தோண்டமுடியாதவாறு அடி அகலமும், உள்ளே இருந்து தொழில்
செய்வோர்க்குத் தலையகலமும் கொண்டிருக்கவேண்டும்.  இவ்வியல்புகளை
உணர்த்தவே 'பரிய மா மதில்' என்றார்.  முடித்தலை: மதில்களின் சிகரம்.
உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும்
நூல் - (குறள் 743).                                            38