தாரை இலக்குவனை நோக்கிப் பேசுதல்

4316.தாமரை வதனம் சாய்த்து, தனு
      நெடுந் தரையில் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம்
      என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
      பொதுவிடைப்புகுந்து, பொன் - தோள்
தூமன நெடுங் கண் தாரை,
      நடுங்குவாள், இனைய சொன்னாள்:

     மைந்தன் - இலக்குவன்; தாமரை வதனம் சாய்த்து - தாமரை போன்ற
தனது முகத்தைச் சாய்த்துக் கொண்டு; நெடுந் தன தரையின் - கையில்
தாங்கிய நெடிய வில்லை நிலத்திலே; ஊன்றி - ஊன்ற வைத்து; மாமியர்
குழுவின் -
மாமியர் கூட்டத்தின் நடுவே; வந்தான் ஆம் என - வந்த
மருமகனைப் போல; நிற்ப - (கூச்சத்தோடு) நிற்க; பொன் தோள் - அழகிய
தோள்களையும்; தூ மனம் - தூய்மையான மணத்தையும்; நெடுங்கண்
தாரை-
நீண்ட கண்களையுமுடைய தாரை; பூமியில் அணங்கு அனார்தம்-
நிலவுலகிற்கு வந்த தேவமகளிர் போன்ற வானரப் பெண்களின்; பொதுவிடைப்
புகுந்து -
கூட்டத்திடையே புகுந்துசென்று; நடுங்குவாள் இனைய
சொன்னான் -
நடுங்கிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொல்லத்
தொடங்கினாள்.

     அன்னியன் எதிரில் வந்து நிற்பதற்குக் கூச்சப்பட்டு மாதர்
கூட்டத்திடையே ஒதுங்கி நிற்பவளும், இலக்குவனோடு பேசுவதற்குக் கூசி
உள்ளமும் உடலும் நடுங்குபவளுமான தாரையின் குணநலம் உணர்த்தப்
பெற்றது. நடுங்குவாள்: முற்றெச்சம்; வினையாலணையும் பெயராக்கியும்
பொருள்உரைக்கலாம்.                                         48