தாரை இலக்குவனை நோக்கிப் பேசுதல் 4316. | தாமரை வதனம் சாய்த்து, தனு நெடுந் தரையில் ஊன்றி, மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப, பூமியில் அணங்கு அனார்தம் பொதுவிடைப்புகுந்து, பொன் - தோள் தூமன நெடுங் கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள்: |
மைந்தன் - இலக்குவன்; தாமரை வதனம் சாய்த்து - தாமரை போன்ற தனது முகத்தைச் சாய்த்துக் கொண்டு; நெடுந் தன தரையின் - கையில் தாங்கிய நெடிய வில்லை நிலத்திலே; ஊன்றி - ஊன்ற வைத்து; மாமியர் குழுவின் - மாமியர் கூட்டத்தின் நடுவே; வந்தான் ஆம் என - வந்த மருமகனைப் போல; நிற்ப - (கூச்சத்தோடு) நிற்க; பொன் தோள் - அழகிய தோள்களையும்; தூ மனம் - தூய்மையான மணத்தையும்; நெடுங்கண் தாரை- நீண்ட கண்களையுமுடைய தாரை; பூமியில் அணங்கு அனார்தம்- நிலவுலகிற்கு வந்த தேவமகளிர் போன்ற வானரப் பெண்களின்; பொதுவிடைப் புகுந்து - கூட்டத்திடையே புகுந்துசென்று; நடுங்குவாள் இனைய சொன்னான் - நடுங்கிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொல்லத் தொடங்கினாள். அன்னியன் எதிரில் வந்து நிற்பதற்குக் கூச்சப்பட்டு மாதர் கூட்டத்திடையே ஒதுங்கி நிற்பவளும், இலக்குவனோடு பேசுவதற்குக் கூசி உள்ளமும் உடலும் நடுங்குபவளுமான தாரையின் குணநலம் உணர்த்தப் பெற்றது. நடுங்குவாள்: முற்றெச்சம்; வினையாலணையும் பெயராக்கியும் பொருள்உரைக்கலாம். 48 |