4320. | மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக் கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப் பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தோடு மறையப் போர்த்த நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். * |
மங்கல அணியை நீக்கி - தாலியை அணியாமல் விடுத்து; மணி அணி துறந்து - இரத்தின மணிகள் போன்ற மற்றைய அணிகலன் களையும் நீக்கிவிட்டு; வாசக் கொங்கு அலர் - மணமிக்க தேன் பெருகுகின்ற மலர்களின்; கோதை மாற்றி - மாலை சூடுவதையும் விட்டு; குங்குமம் சாந்தம் கொட்டா - குங்குமப் பூவின் குழம்பையும், சந்தனக் கலவையையும் பூசாத; பொங்கு வெம் முலைகள் - பருத்துள்ள வெம்மையான முலைகள்; பூகக் கழுத்தோடு மறையப்போர்த்து - பாக்குமரம் போன்ற கழுத்துடன் மறையும்படி (மேலாடையால்) நன்றாகப் போர்த்துள்ள; நங்கையைக் கண்ட வள்ளல் - அத் தாரையைப் பார்த்த அருள்வள்ளலான இலக்குவன்; நயனங்கள் பனிப்ப - (தாரை யின் தோற்றம் கண்டதாலும், தன் தாயரை நினைந்ததாலும்) தன் கண்களில் நீர் துளிக்க; நைந்தான் - வருந்தினான். தாரையின் கைம்மைக் கோலம் இங்கு விளக்கப் பெறுகின்றது. இலக்குவன் கண்ணீர் மல்கி நைந்துருகுவதற்குக் காரணம் தன்னுடைய தாயரும் இப்படித்தானே கைம்மைக் கோலம் பூண்டிருப்பர் என்ற நினைவினால். மங்கலவணி. 'தாலி'; 'ஈகையரிய இழையணி மகளிர்' - புறம்.127 52 |