4322.'  ''சேனையும் யானும் தேடித்
      தேவியைத் தருவென்'' என்று,
மானவற்கு உரைத்த மாற்றம்
      மறந்தனன், அருக்கன் மைந்தன்;
''ஆனவன் அமைதி வல்லை அறி''
      என, அருளின் வந்தேன்;
மேல் நிலை அனையான் செய்கை
      விளைந்தவா விளம்புக!' என்றான்.

     சேனையும் யானும் - என் சேனையும் நானும்; தேவியைத் தேடித்
தருவென் -
சீதையைத் தேடிக் கொண்டு சேர்ப்பேன்; என்று மான வற்கு -
என்று மனுகுல மன்னனான இராமனுக்கு; அருக்கன் மைந்தன் - சூரியன்
மகனான சுக்கிரீவன்; உரைத்த மாற்றம் மறந்தனன் - தான் சொன்ன
வார்த்தையை மறந்துவிட்டான்; ஆனவன் அமைதி - அத்தகையை
சுக்கிரீவனின் நிலைமையை; வல்லை அறி என - விரைவில் சென்று நீ
அறிந்து வருவாயாக என்று (இராமன் என்னிடம்) சொல்ல; அருளின்
வந்தேன் -
அந்தக் கட்டளைப்படி நான் இங்கே வந்தேன்; மேல்நிலை
அனையான் -
மேன்மையான அரசாட்சியைப் பெற்ற அச் சுக்கிரீவனது;
செய்கை விளைந்தவா -
செயல்முறை நிகழ்ந்த விதத்தை; விளம்புக
என்றான் -
சொல்லுக என்று (தாரையைப் பார்த்து) இலக்குவன் கூறினான்.

     சுக்கிரீவன் இராமனிடம் சொன்னபடி வராததால் அவனது செயலை
அரிய வந்தேன்; அவனது செயல்தான் என்ன என்று இலக்குவன் தாரையை
வினவினான் என்பது. விளைந்தவாறு என்பது ஈறுகெட்டு நின்றது.        54