4327. | 'ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின், வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லினும் மிக்கது உண்டோ? தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே பூண்டு நின்று உய்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.' |
ஆண்டு போர் வாலி - அப்பொழுது போரில் வல்ல வாலியின்; ஆற்றல் மாற்றியது - வலிமையை வதைத்தது (வாலியைக் கொன்றது) அம்பு ஒன்று - (நீங்கள் ஏவிய) பாணம் ஒன்றே; ஆயின் துணைவர் வேண்டுமோ - என்றால், (பகைவரையழிக்க) உங்களுக்கு வேறு துணை வேண்டுமோ? நும்பால் வில்லினும் - உங்களிடமுள்ள வில்லைக் காட்டிலும்; மிக்கது உண்டோ - சிறந்த ஒரு துணையும் உள்ளதோ?தேவியைத் தேண்டுவார் - சீதை இருக்கும் இடத்தைத் தேடிக் காண்பாரை மட்டும்; தேடுகின்றீர் - நாடுகின்றீர் (அவ்வளவுதான்); நும் கழல் - உங்கள் திருவடிகளை; புகுந்துளோரும் - சரணடைந்துள்ளவரான சுக்கிரீவன் முதலானோரும்; அதனைச் செவ்வே பூண்டு நின்று - அப் பணியை நல்ல முறையில் ஏற்றுக் கொண்டு செம்மையாகச் செய்து; உய்தற் பாலார் - ஈடேறக் கடமைப்பட்டவராவார். உங்களுக்குச் சீதையுள்ள இடத்தைத் தேடியறியத் துணை வேண்டுமெயல்லாமல் பகை வெல்லத் துணை தேவையில்லை. ஆகவே, அப் பணியைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டவர் சுக்கிரீவன் முதலியோரே என்றாள் தாரை. தேண்டுவார் - தேடுதல் விரித்தல்விகாரம். 59 |