4338.'தேவியைக் குறித்துச் செற்ற
      சீற்றமும், மானத் தீயும்,
ஆவியைக் குறித்து நின்றது,
      ஐயனை; அதனைக் கண்டேன்;
கோ இயல் தருமம் நீங்க,
      கொடுமையோடு உறவு கூடி,
பாவியர்க்கு ஏற்ற செய்கை
      கருதுவன்; பழியும் பாரேன்.

     தேவியைக் குறித்து - சீதையை (இராவணன் கவர்ந்து சென் றதை)க்
குறித்து; செற்ற சீற்றமும் - கறுவு கொண்ட சினமும்; மானத் தீயும் -
மானமாகிய நெருப்பும்; ஐயனை ஆவியை - இராமனது உயிரை; குறித்து
நின்றது -
பற்றி வருத்தி நின்றன; அதனைக் கண்டேன் - அவ்வாறு
வருத்துவதை (நேரிலே) கண்ட நான்; கோ இயல் தருமம் நீங்க -
அரசர்களுக்குரிய தருமம் அழிய; கொடுமையோடு உறவு கூடி -
கொடுந்தன்மையோடு உறவு கொண்டாடி; பாவியர்க்கு ஏற்ற செய்கை -
கொடிய பாவியர்க்குரிய செயல்களை; கருதுவன் - செய்யக் கருதியுள்ளேன்;
பழியும் பாரேன் -
(அதனால் எனக்கு வரக் கூடிய) பழியையும் சிறிதும்
கருதமாட்டேன்.

     இராவணன் சீதையைக் கவர்ந்த செயல் இராமனை மிக வருத்தியது.
அதனை நேரில் கண்ட இலக்குவன் தனக்கு நேரும் சீற்றத்தையும்; அதன்
விளைவுகளையும் எடுத்துரைக்கின்றான்.  காலம் பார்த்துச் சினம்
ஆறியிருத்தல் அரசனுக்குக் கடமையாயிருக்க, இராமனுக்கு நேர்ந்த
துன்பங்களைக் கண்டு, ஆற்றாமல் இலக்குவன் 'கோவியல் தருமம் நீங்க...
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்' என்றான்.                     70