அனுமன் இலக்குவனைச் சுக்கிரீவனிடம் வருமாறு அழைத்தல் 4343. | தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது, 'தொல்லை ஆன்ற நூல் அறிஞ! போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை; ஏன்றது முடியேம்என்னின், இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம் சான்று இனி அறனே; போந்து, உன் தம்முனைச் சார்தி' என்றான். |
தோன்றல் - காண்பதற்கு இனியவனான இலக்குவன்; அஃது உரைத்தலோடும் - அவ் வார்த்தைகளைச் சொன்னவுடனே; மாருதி தொழுது - வாயு மைந்தனான அனுமன் (இலக்குவனை) வணங்கி; தொல்லை ஆன்ற நூல் அறிஞ - பழமையான சிறந்த நூல்களை அறிந்தவனே; போன பொருள் - நடந்து முடிந்த செய்திகளை; மனத்து அடைப்பாய் அல்லை - மனத்தில் கொள்ளாதிருப்பாயாக; ஏன்றது முடியேம் என்னின் - (நாங்கள்) ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யாது விடுத்தோமாயின்; இறத்தும் - உயிர்விடக் கடவோம்; இத் திறத்துக்கு எல்லாம் - இந்த வகைச் செய்திகளுக்கெல்லாம்; இனி அறனே சான்று - இனிச் சாட்சியாக இருப்பது தருமமே; போந்து - உள்ளே வந்து; உன் தம்முனை - உனக்கு அண்ணன் முறையாகும் சுக்கிரீவனிடம்; சார்தி என்றான் - சோர்வாய் என்று சொன்னான். அனுமன் இலக்குவனது சினத்தைத் தணிக்க விரும்பிச் 'சீதையைத் தேடுதல் முதலான செயல்களைத் தவறாது செய்துமுடிப்போம்; அவ்வாறு முடியாவிட்டால் நாங்கள் இறந்துபடுவோம்; இச் செயலுக்கு தருமமே சாட்சி' என்றான் என்பது. சான்று இனி அறனே: நாங்கள் அறம் திறம்பினோம் என்று நீங்கள் இனியும் எங்களைக் கொல்ல வேண்டா. ஏனென்றால் அறமே எங்களைக் கொன்று விடும். மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் மற்றவன் கேடு (குறள் - 204) ஆன்ற - சான்ற என்பதன் மரூஉ. தோன்றல் - பெருமையாளன். ஆண்பாற் சிறப்புப் பெயர். 75 |