இலக்குவன் சினத்திற்குக் காரணம் என்ன எனச்சுக்கிரீவன் வினவுதல்

4347.போனபின், தாதை கோயில் புக்கு,
      அவன் பொலம் கொள் பாதம்
தான் உறப் பற்றி, முற்றும்
      தைவந்து, 'தடக் கை வீர!
மானவற்கு இளையோன் வந்து, உன்
      வாசலின் புறத்தான்; சீற்றம்
மீன் உயர் வேலைமேலும் பெரிது;
      இது விளைந்தது' என்றான்.

     போனபின் - இலக்குவனைவிட்டு (அங்கதன்) நீங்கிச்சென்ற பிறகு;
தாதை கோயில் புக்கு -
சிற்றப்பனாகிய சுக்கிரீவனது அரண்மனைக்குள்
புகுந்து; அவன் பொலம்கொள் பாதம் - அச் சுக்கிரீவனுடைய
பொன்போன்ற (அழகான) பாதகங்களை; தான் உறப் பற்றி - தான் நன்றாகப்
பிடித்துக் கொண்டு; முற்றும் தைவந்து - முழுவதும் தடவி (துயிலெழுப்பி);
தடக்கை வீர -
நீண்ட கைகளையுடைய வீரனே; மானவற்கு இளையோன்
வந்து -
இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் வந்து; உன் வாசலின்
புறத்தான் -
உனது அரண்மனை வாயில் வெளியிலே நிற்கின்றான்; சீற்றம் -
(அவன் இப்பொழுது கொண்டுள்ள) சினமானது; மீன் உயர் வேலை மேலும்
பெரிது -
மீன்கள் நிறைந்துள்ள கடலைக் காட்டிலும் பெரியது; இது
விளைந்தது -
இது நடந்த செய்தி; என்றான் - என்று கூறினான்.

     பொலம் - பொன், அழகு. தைவருதல் - தடவுதல். மானவன் -
பெருமையுள்ளவன்.                                              79