4351. | 'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால் தீண்டினன்; தீண்டாமுன்னம், தெற்கொடு வடக்குச் செல்ல நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும், கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே. |
ஆண்தகை - ஆடவருள் சிறந்தவனான இலக்குவன்; அதனை நோக்கி - வானரர்களின் அந்தச் செயலைப் பார்த்து; அம் கமல மலர்த் தாளால் தீண்டினன் - அழகிய செந்தாமரை மலர் போன்ற தனது காலால் (அடைத்த வாயில் கதவை) உதைத்தான்; தீண்டாமுன்னம் - (அத்திருவடி) படுவதற்கு முன்பே; தெற்கொடு வடக்குச் செல்ல - தென்வடலாகப் பரவி; நீண்ட கல் மதிலும் - நீண்டுள்ள கல்லால் ஆகிய மதில்களும்; கொற்ற வாயிலும் - வெற்றி பொருந்திய நகரவாயிலும்; நிரைத்த குன்றும் - வரிசையாக அடுக்கி வைத்த குன்றுகளும்; தகர்ந்து கீண்டன - உடைந்து சிதறினவாகி; பின்னை - பின்பு; பொடியொடும் கெழீஇய - பொடியுடன் கலந்து ஒன்றாயின. அன்றே - ஈற்றசை; தீண்டாமுன்னம் தகர்ந்து கீண்டன - மிகையுயர்வு நவிற்சியணி. கீண்டன - கிழிந்தன, உடைந்தன, 'தகர்ந்து கீண்டன' என்பதைக் கீண்டு தகர்ந்தன எனப் பிரித்துக் கூட்டிப் பிளந்து உடைந்தன எனவும் பொருள் கொள்ளலாம். பிளப்பது முதலில் தகர்வதுபின்னால். 83 |