4353.'மங்கையர் மேனி நோக்கான்,
      மைந்தனும், மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப்
      புகல்கிலன்; பொருமி நின்றான்;
நங்கையும், இனிது கூறி,
      ''நாயக! நடந்தது என்னோ,
எங்கள்பால்?'' என்னச் சொன்னாள்;
      அண்ணலும் இனைய சொன்னான்.

     மைந்தனும் - வீரனான இலக்குவனும்; மங்கையர் மேனி நோக்கான்-
(இவ்வாறு வழியில் நின்ற தாரை முதலிய) பெண்களின் உரு வத்தை
நிமிர்ந்தும் பாராதவனாய்; மனத்து வந்து பொங்கிய - தன் மனத்திலே
எழுந்து பொங்கி நின்ற; சீற்றம் பற்றிப் புகல்கிலன் - சினத்தால் ஒன்றும்
சொல்ல மாட்டாதவனாய்; பொருமி நின்றான் - விம்மி நின்றான்;
நங்கையும்- பெண்களில் சிறந்தவளான (எனது தாயாகிய) தாரையும்; இனிது
கூறி -
(இலக்குவனது கோபம் தணியுமாறு) இனிய சொற்களைச் சொல்லி
(அவனைப்பார்த்து); நாயக- 'தலைவனே! எங்கள்பால் நடந்தது என்னோ-
(நீஇராமனை விட்டுப் பிரிந்து) எங்களிடம் வந்தது எதற்காக?'என்னச்
சொன்னாள் -
என்று கேட்டாள்; அண்ணலும் - இளைவனான இலக்குவனும்;
இனைய சொன்னான் -
வந்த காரணத்தைக் கூறினான்.

     மங்கையர் மேனி நோக்கான் - அயல் மாதரைக் கண்ணெடுத்துப் பாராத
நோன்புடையவன் இலக்குவன் என்பது அறியப்படும்.                   85